பக்கம் எண் :

126கலிங்கத்துப்பரணி

     இங்ஙனம்    சென்றபடை   பாலாற்றையும்,   குசைத்தலையாற்றையும்,
பொன்முகரியாற்றையும், கொல்லியாற்றையும் கடந்து, வடபெண்ணையாற்றையும்
கடந்து,  மேலும்  சென்று மண்ணாற்றையும், குன்றியாற்றையும், பேராற்றையும்
(கிருஷ்ணாநதி)  கடந்து,  பின்,  கோதாவரியாற்றையும்    பம்பையாற்றையும்
காயத்திரியாற்றையும்     கோதமையாற்றையும்    கடந்து,     கடைசியாகக்
கலிங்கத்தையடைந்தது.     அடைந்ததும்,     கலிங்கத்தில்     தீவைத்தும்
சூறைகொண்டும் அழிக்கப் புகுந்தது.

     இதுகண்ட   கலிங்கர்,   கலிங்கவேந்தன்   அநந்தபதுமனிடம்    ஓடி
முறையிட்டுக் குலோத்துங்கன் படைவந்து வளைந்த தென்றனர்.   அதுகேட்ட
கலிங்கவேந்தன், 'குலோத்துங்கன் விட்ட படைக்கோ யான் அஞ்சுவன்' என்று கூறி ஆர்த்தெழலும், அமைச்சனாகிய  அங்கராயன்  குலோத்துங்கன்  விட்ட
படைகளே    பலபோர்களில்    வெற்றி    பெற்று   மீண்ட   தன்மையை
எடுத்துக்காட்டிக், கருணாகரன்  படைத்தலைமை   பூண்டு  வந்திருப்பதையும்
எடுத்துரைத்தனன்.  கலிங்கவேந்தன்   அம்   மொழியை   இகழ்ந்துரைத்துச்
சினந்து,     படைகளைப்போர்க்கெழுமாறு  கட்டளை இட்டனன். நால்வகைப் படைகளும் எழுந்தன.

இவ்வளவில் இப் பகுதி முடிவுறுகிறது.

கலிங்கப்போர் உரைத்தற்கருமை

312.மாவா யிரமும் படக்கலிங்கர்
      மடிந்த களப்போர் உரைப்போர்க்கு
நாவா யிரமுங் கேட்போர்க்கு
     நாளா யிரமும் வேண்டுமால்.

     (பொ-நி.)  கலிங்கர்  மடிந்த  போர் உரைப்போர்க்கு  நாவா யிரமுங்
கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டும்; (எ-று.)

     
(வி-நி.) மா-யானை.  பட - இறந்துபோம்படி.  நாள் ஆயிரம்-ஆயிரம்
நாட்கள், அஃதாவது மிகுதியான ஆயுள்.                          (1)

இதுவும் அது

313.ஒருவர்க் கொருவாய் கொண்டுரைக்க
      ஒண்ணா தேனும் உண்டாகுஞ்
செருவைச் சிறியேன் விண்ணப்பஞ்
     செய்யச் சிறிது கேட்டருளே.