பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது129


வீற்றிருந்த சிறப்பு

319.பணிப்ப ணத்துறை பார்க்கொரு நாயகன்
      பல்க லைத்துறை நாவி லிருந்தவன்
மணிப்ப ணிப்புயத் தேசிங்க வாகனி
     வந்து செந்திரு மாதொ டிருக்கவே.

     (பொ-நி.)  நாயகன், இருந்தவன் புயத்தே சிங்க வாகனி திருமாதொடு
இருக்க; (எ-று.)

     (வி-ம்.) பணி - பாம்பு  (ஆதிசேடன்).  பணம் - படம் (தலை) பார்-
உலகம். இருந்தவன்-இருக்கப்பெற்றவன். மணி -இரத்தினம். பணி -அணிகள். சிங்கவாகனி-சிங்கஊர்தியையுடையவள்; வீரமகள். திருமாது-திருமகள்.   (8)

தேவியர் உடன் இருந்தமை

320.தரும டங்க முகந்து தனம்பொழி
      தன்பு யம்பிரி யாச்சயப் பாவையும்
திரும டந்தையும் போல்பெரும் புண்ணியம்
     செய்த தேவியர் சேவித்தி ருக்கவே.

     (பொ-நி.) தனம்பொழி புயம் பிரியா தேவியர் சேவித்திருக்க; (எ-று.)

     (வி-ம்.) தரு - கற்பகத்தரு.  மடங்க  நாணித் தலை கவிழ. முகந்து-
அள்ளி. தனம்- பொருள்.பொழிகின்ற  புயம்  என்க. தேவியர் மனைவிமார்
(தியாகவல்லியும் ஏழிசை வல்லபியும்) சேவித்தல் - வணங்கல்.         (9)

ஆடல்பாடல் மகளிர் சூழ்ந்திருந்தமை

321.நாட காதி நிருத்த மனைத்தினும்
      நால்வ கைப்பெரும் பண்ணினும் எண்ணிய
ஆடல் பாடலரம்பையர் ஒக்குமவ்
     வணுக்கி மாரு மநேக ரிருக்கவே.

     (பொ-நி.) நிருத்தம்  அனைத்தினும், பண்ணிணும், எண்ணிய ஆடல்
பாடல் அணுக்கிமாரும் அநேகர் இருக்க; (எ-று.)