பக்கம் எண் :

160கலிங்கத்துப்பரணி

     இவ்வளவில்  தன்  படையின்  தளர்ச்சியைக்  கண்ட கலிங்க வேந்தன்
அனந்தபதுமன்,  எதிர்நிற்கலாற்றாது  மறைந்து பதுங்கி விட்டனன்.அதுகண்ட
கலிங்கவீரர் நாற்புறமும் உடைந்தோடிப் பதுங்கலாயினர்.

     சோழவீரர்  கலிங்கர்  யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும்,
ஒட்டகங்களையும்,  கலிங்கர்  செல்வங்களையும்,  மகளிரையும் கைப்பற்றினர்.

     இங்ஙனம்    கவர்ந்த   அளவில்,   கருணாகரன்,   கலிங்கவேந்தன்
இருக்குமிடத்தை அறியுமாறு, ஒற்றர்களையும் படைகளையும் ஏவினன்.

     ஒற்றர்கள்  கலிங்கவேந்தனை   காணாராகி,  ஒரு   மலைக்குவட்டில்
கலிங்கவீரர்  சூழ்ந்திருக்கக்கண்டு கூற,  அதுகேட்ட  சோழவீரர்  விரைந்து
சென்று,  ஞாயிறு   மேற்றிசையில்  விழுங்காலை   அம்    மலையடியைக்
குறுகினோர்.குறுகினர் வில்லும்  வேலும்  கைக்கொண்டு   அவ்   வெற்பை
விடியுமளவும் காத்து நின்றனர்.   பொழுது   விடியவும்,   சூழ்ந்து,   நின்ற
வீரரொடு பொருது, குன்று முழுதும் குருதி சோர, அவர்களை அழித்தனர்.

     இவ்வளவில்  கலிங்கவீரர்  பலரும்  தங்கள்  உருக்கரந்து  நாற்புறமும்
ஓடலாயினர்.  மறைந்தோடினாரன்றி  மற்றைக்  கலிங்கரையெல்லாம்  பற்றிக்
கொன்றனர் சோழவீரர்.

     இங்ஙனமாகக்,  கருணாகரன்   கலிங்கத்தை  அழித்து,  வெற்றித்தூண்
நிலைநிறுத்தி,  யானைகளையும்,  செல்வத்தையும்  கவர்ந்து   கொண்டுவந்து
குலோத்துங்கன்  அடியை  வணங்கி  மகிழ்ந்தனன் என்ற அளவில் இப்பகுதி
முடிகிறது.]

போர்த்தொடக்கம்

404.எடுமெடு மெடுமென வெடுத்ததோர்
      இகலொலி கடலொலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
     விடும்விடு மெனுமொலி மிகைக்கவே.

     (பொ-நி.) இகல் ஒலி கடல் ஒலி இகக்க, ஒலி மிகைக்க ; (எ-று.)

     (வி-ம்.) எடும்-படை எடும். இகல்-போர். இகத்தல்-கடத்தல். விடுபரி,
கரிக்குழாம் விழும் என இயைக்க;பரி-குதிரை. கரி-யானை. மிகைக்க-மிக்கெழ.
                                                              (1)