பக்கம் எண் :

162கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) வரை - மலை. முனைத்தல் -போர்புரிதல். கரி-யானை.முகில்-
மேகம். இரதம்-தேர்ப்படை.                                    (4)

வீரர்களும் அரசர்களும் மலைந்தமை

408.பொருபுலி புலியொடு சிலைத்தபோல்
      பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியினம் அடர்ப்பபோல்
     அரசரும் அரசரும் அடர்க்கவே.

     (பொ-நி.) படரொடு  படர்  புலியொடு  புலி சிலைத்தபோல் சிலைக்க,
அரசரும் அரசரும்  அரியினொடரியினம் அடர்ப்பபோல்  அடர்க்க; (எ-று.)

     (வி-ம்.) சிலைத்தல்-ஆர்த்துப்பொருதல். படர்-படைவீரர். அரி-சிங்கம்.
அடர்த்தல்-நெருங்கிப் பொருதல்.                               (5)

போரின் கடுமை

409.விளைகனல் விழிகளின் முளைக்கவே
      மினலொளி கனலிடை எறிக்கவே
வளைசிலை யுருமென இடிக்கவே
     வடிகணை நெடுமழை படைக்கவே.

     (பொ-நி.) விழிகளின் கனல் முளைக்க, கனலிடை ஒளி எறிக்க, சிலை
இடிக்க, கணை மழை படைக்க; (எ-று.) 

     (வி-ம்.) கனல்-சினத்தீ. மினல் ஒளி-மின்னல்போன்ற  ஒளி. சிலை-வில்.
உரும்-இடி. வடி-கூர்மை. கணை-அம்பு. படைக்க-உண்டாக்க. வீரர் விழிகளில்
தோன்றிய கனலில் மின்னலொளி தோன்றிய தென்க. வில் இடியையுண்டாக்க.
அம்பு மழையையுண்டாக்கின வென்க.                           (6)

குருதியாற்றியல்பு

410.குருதியின் நதிவெளி பரக்கவே
      குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுடல் அடுக்கியே
     கரைஎன இருபுடை கிடக்கவே.