பக்கம் எண் :

174கலிங்கத்துப்பரணி

தொடை வெட்டுண்ட வீரர் செயல்

438.இருதொடையற் றிருக்கு மறவர்கள்
      எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட
ஒருதொடையைச் சுழற்றி எறிவர்கள்
     ஒருதொடைஇட் டுவைப்பர் எறியவே.

     (பொ-நி.)  மறவர்கள், களிற்றின்  வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி
எறிவர்கள்; ஒரு தொடை எறிய இட்டு வைப்பர்; (எ-று.)

     (வி-ம்.)  இருதொடை - தம்   இரண்டு  தொடைகளும.்  மறவர்கள்-
போர்வீரர்கள். கை - துதிக்கை. தொடை - வெட்டுண்டு பக்கத்தே  கிடக்கும்
தொடை. இட்டு வைப்பர்-போட்டிருப்பர். எறிய-மீண்டும் எறியவேண்டி.
                                                         (35)

வாட்போர்

439.இருவருரத் தின்உற்ற சுரிகையின்
      எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில்
ஒருவரெனக் கிடைத்த பொழுதினில்
     உபயபலத் தெடுத்த தரவமே.

     (பொ-நி.) இழைக்கும் அளவினில், இருவர் உரத்தின் உற்ற சுரிகையின்,
ஒருவர் என, கிடைத்தபொழுதினில், அரவம் எடுத்த; (எ-று.)

     (வி-ம்.) உரம் -மார்பு. சுரிகை - உடைவாள். இழைத்தல்-போர்செய்தல்.
கிடைத்தல்-இயைதல்.  ஒருவர்  வாள்மற்றொருவர் மார்பிலே  புக, இருவரும்
ஒருவரேபோல் தோன்றினர் என்க. உபயம்-இரண்டு. பலம்-சேனை. எடுத்தது-
தோன்றியது; அரவம்-ஒலி.                                   (36)

வீரர் யானைவீரரோடு பொருதமை

440.பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ்
      புகர்முகம் மிசையடி யிட்ட திற்பகை
விருதரை அரிவர்சி ரத்தை அச்சிரம்
     விழுபொழு தறையெனும் அக்க ளிற்றையே.