பக்கம் எண் :

போர் பாடியது183


அதுகேட்ட படைஞர் செய்தி

463. எக்குவடும் எக்கடலும் எந்தக் காடும்
       இனிக்கலிங்கர்க் கரணாவது இன்றே நாளும்
அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன்
     அத்தமனக் குவடணையும் அளவிற் சென்றே.

     (பொ-நி.)  இனி, குவடும்  கடலும்  காடும்  கலிங்கர்க்கு அரணாவது
இன்று நாளும்  குவடும் கடலும்  வளைந்து  அத்தமனக்குவடணையு மளவில்  சென்று; (எ-று.)

     (வி-ம்.) குவடு-மலை. இனி-புலன் தெரிந்துவிட்டமையின் இனி. அரண்-
பாதுகாவல். இன்று - இல்லை. நாளும் - நாள் முழுதும். அ: கலிங்கநாட்டின்
கண்ணவற்றைக் குறித்தது:  வளைந்து - சுற்றிச்சுற்றிச்  சென்று  (கடைசியாக),
வெய்யோன் - ஞாயிறு.  அத்தமனக்குவடு - மறைகின்றமலை.  அஸ்தமனம்-
அத்தமனமெனத் தற்பவமாயிற்று.                              (60)

படைஞர் குன்றைச் சூழ்ந்து நின்றமை

464.தோலாத களிற்றபயன் வேட்டைப்பன்றி
      தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார்போல
வேலாலும் வில்லாலும் வேலி கோலி
     வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே.

     (பொ-நி.)  பன்றி  தொழு  அடைத்து, காப்பார் போல, வெற்பதனை
வேலி கோலி, விடியளவும் காத்து நின்று; (எ-று.)

     (வி-ம்.)  தோலாத - தோல்வியுறாத.   வேட்டைப்பன்றி -வேட்டையிற்
கொணர்ந்த  பன்றி.  தொழு விலங்குகளை அடைக்கும் பெரிய கூடு. கோலி-
வளைத்து. வெற்பு-மலை. விடி அளவு-பொழுது விடியும்வரை.        (61)

குன்று காத்த கலிங்கவீரரை அழித்தமை

465.செம்மலையாய் ஒளிபடைத்த தியாதோ என்றும்
      செங்கதிரோன் உதயஞ்செய்து உதய மென்னும்
அம்மலையோ இம்மலையும் என்னத் தெவ்வர்
     அழிகுருதி நதிபரக்க அறுக்கும் போழ்தில்.