வள்ளைப்பாட்டுப் பாடி, அரிசியைத் தீட்டின. பின் அரிசியைப் புடைத்து அளந்து உலைதோறும் சொரிந்து, துடுப்பும் அகப்பையும் கொண்டு அட்டன. பின், கூழை உப்புப் பதம் பார்த்துக் கிண்டிப் பதம் பார்த்து இறக்கி வைத்தன; தண்ணீர் முகந்து வைத்துக் கொண்டன; அலகிட்டு நீர்தெளித்து உண்பதற்கு நிலம் திருத்தின; உண்கலம் பரப்பின; பகல் விளக்கும் பாவாடையும் இட்டன; உணவு கொள்ள எல்லாப் பேய்களையும் அழைத்தன; உணவு படைக்க அகப்பைகளைக் கொண்டன: மடைப்பேய்கள் கூழ் வார்க்கத் தொடங்கின. பல்வகைப் பேய்கட்கும் கூழ் வார்க்கப்பட்டது. பேய்கள் எல்லாம் உண்டன; வாய் பூசின; வெற்றிலைபாக் கயின்றன; குதித்துக் கூத்தாடின; குலோத்துங்கனை வாழ்த்தின, இவ்வாறு கூறி முடிக்கின்றார் ஆசிரியர். போர்க்களப் பெருமை 472. | தேவாசுரம் ராமாயணம் மாபாரதம் உளவென்று | | ஓவாஉரை ஓயும்படி உளதப்பொரு களமே. |
(பொ-நி.) அப் பொருகளம், தேவாசுர, ராமாயண, மாபாரதம் உள என்ற உரை ஓயும்படி உளது; (எ-று.) (வி-ம்.) தேவாசுரம் - சூரபதுமன் போர். ராமாயணம் மாபாரதம் அப்போர்களைக் குறித்து நின்றன. உள- சிறப்புற்றுப்பேச உள்ளன. ஓவா -ஒழியாத. உரை-சொல். உளது-சிறப்புற்றுளது. பொருகளம் -கருணாகரன் போர்க்களம். (1) கலிங்கப்பேய் காளியைக் களம் காணுமாறு அழைத்தலும் காளி களம் குறுகலும் 473. | காலக்கள மதுகண்டருள் இறைவீகடி தெனவே | | ஆலக்கள முடையான்மகிழ் அமுதக்களம் அணுகி. |
(பொ-நி.) களமது, கண்டருள் கடிதென; உடையான் மகிழ் அமுது, களம் அணுகி; (எ-று.) (வி-ம்.) காலன் - யமன். இறந்த உடல்களே நிறைந்தமையின் காலக்களமாயிற்று. இறைவீ - காளியே. கடிது - விரைவில். ஆலக்களம் உடையான்- நஞ்சுபூண்ட மிடற்றையுடைய சிவன். மகிழ் அமுது: காளி. அமுதத்தை யொத்தவள்: ஆகுபெயர். இதுவரை மொழிந்த செய்திகளெல்லாம் கலிங்கப் பேயின் கூற்றேயாவதைத் தெளிக. (2) |