பக்கம் எண் :

களம் பாடியது189


     (பொ-நி.)  குதிரை, கலணை  சரிய,  சேற்றில்  கால்பாய்ந்து குளிப்ப,
நின்று, குதிரைத்தறி போன்ற பரிசு காண்மின் ! (எ-று.)

     (வி-ம்.)  கலணை-சேணம்.  பாய்ந்து-நெடுந்தொலை  சென்று. நிணம்
-கொழுப்பு குளித்தல்-மூழ்குதல்.  நிரை-வரிசை.  குருதி-செந்நீர்.  கடும்புனல்
-வெள்ளம். பாய்ந்த-நெடுந்தொலை  அழுத்தி  வைக்கப்பட்ட.  குதிரைத்தறி:
வெள்ளத்தை அடைத்துத் தடுக்கும் மரப்பலகை. பரிசு-தன்மை.        (5)

வீரர் முகமலர்ந்து கிடந்தமை

477. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
       மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப்
     பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்.

     (பொ-நி.)   விருந்தினரும்   வறிஞரும்  உண்ண,  முகம்  மலரும்
மேலோர் போல, பருந்தினமும்  கழுகினமும்  உண்ண,  முகமலர்ந்தாரைப்
பார்மின்! (எ-று.)

     (வி-ம்.)  வறியவர் - ஏழையர்.  நெருங்கி  உண்ண - அடுத்தடுத்து
உண்பதற்கு.   மேலோர்:  இல்லறத்   துயர்ந்தோர்.  பதுமாம்  - தாமரை.
மலர்ந்தார்-மலர்ச்சிகொண்ட போர்வீரர்: வினையாலணையும் பெயர்.
                                                           (6)

குற்றுயிராய்க் கிடந்த வீரரை நரி சூழ்ந்திருந்தமை

478. சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
      சாருநர்போல் வீரருடல் தரிக்கும் ஆவி
போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
     போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்.

     (பொ-நி.) சாமளவும்  உதவாதவரை,  சாருநர்போல், ஆவிபோம்
அளவும்,  அருகே  இருந்து,  விட்டுப்போகாத,  நரிக்குலத்தின்  புணர்ச்சி
காண்மின்! (எ-று.)

     (வி-ம்.) நச்சி-விரும்பி. சாருநர்-அடைவோர். தரித்தல்-நிலைபெறல்.
ஆவி-உயிர். நரிக்குலம்-நரிக்கூட்டம். புணர்ச்சி-கூட்டம்.           (7)