பக்கம் எண் :

190கலிங்கத்துப்பரணி

களத்தே வீழ்ந்து கிடக்கும் யானை இயல்பு

479.மாமழைபோல் பொழிகின்ற தானவாரி
       மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானோர்
பூமழைமேல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
      பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின்.

     (பொ-நி.) தானவாரி மறுத்து, கற்றை வெறுத்து, பூமழை மேல் நிரந்த
வண்டு, பொருட்பெண்டிர் போன்றமை காண்மின்! (எ-று.)

     (வி-ம்.) தானம் - மதநீர். வாரி-பெருக்கு.  மறுத்து-ஒழித்து. வானோர்
-தேவர். பூமழை-கருணாகரன்  வெற்றி  கண்டு  பொழிந்த  பூமழை.  நிரந்த
-பரவிய.   பொருட்பெண்டிர்  -  விலைமாதர்.  விலைமகளிர்,  ஒருவனிடம்
செல்வமுள்ளவரையும் அவன்பால்  அன்புற்றிருந்து,  செல்வம்  அற்றபோது
அவனை நீத்துச் செல்வமுள்ள வேறொருவனைச் சேர்தல்போல, வண்டுகளும்
யானைகள் உயிருடன் இருக்குமளவும் அதன் மதநீருண்ணக்காத்திருந்து அவ்
யானைகள் இறந்ததும் தேவர்கள்  தூற்றும்  மலர்  மழைகளிலுள்ள  தேனை
உண்பதற்குச் சார்ந்தன என்க.
                                                            (8)

கொடியோடு வீழ்ந்து கிடக்கும் யானைகளைக் கூறியது

480.சாய்ந்துவிழும் கடகளிற்றி னுடனே சாய்ந்து
       தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள்
காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகுங்
      கற்புடைமா தரைஒத்தல் காண்மின் காண்மின்.
 
      (பொ-நி.) களிற்றினுடனே  சாய்ந்து,  படியும் கொடிகள் காந்தருடன்
வைகும் கற்புடைய மாதரை ஒத்தல் காண்மின்! (எ-று.)

     
(வி-ம்.)  கடம் - மதம். குருதி - செந்நீர். மிசை - மேலே. கொடிகள்
-அரசர்க்குரிய கொடிகள். காந்தர். கணவர்.  கனல் - தீ.  அமளி - படுக்கை.
வைகுதல்  -  தங்குதல்.   அரசர்   தம்   கொடிகள்   செந்நீரச்  சேற்றில்
வீழ்ந்துகிடக்கும்    தோற்றம்,    கற்புடைமகளிர்    தத்தம்   காதலரோடு
உடன்கட்டையேறிய காட்சிபோன்றிருந்தது.
                                                           (9)