பக்கம் எண் :

காடு பாடியது33


    (வி-ம்.)  உதிர்ந்த  -  இலை  உதிர்ந்த.  வெள்ளில்  - விளாமரம்.
உணங்குதல் - உலர்தல்.  ஒடுங்குதல் - வளராது  குறுகுதல். துள்ளி -ஒரு
வகை முட்செடி. வேல்  - கருவேல்,  வெள்வேல்  மரங்கள்.  பிதிர்தல் -
பிளத்தல்.  முள்ளி  -  முள்ளிச்செடி.  வள்ளி  -  வள்ளிக்கொடி. கள்ளி
கொடிக்கள்ளி, திருகுகள்ளி முதலியன. பரந்த-பரவியிருந்தன. (3)

இதுவும் அது

78.வற்றல் வாகைவ றந்த கூகைம
     டிந்த தேறுபொ டிந்தவேல்
முற்ற லீகைமு ளிந்த விண்டுமு
   ரிந்த புன்குநி ரைந்தவே.

    (பொ-நி.)  வாகை,  கூகை,  தேறு,  வேல்,  ஈகை,  தண்டு, புன்கு
நிறைந்த; (எ-று.)

    (வி-ம்.)வறந்த - நீர்வற்றிய.  கூகை - ஒருவகைக் கிழங்குக் கொடி.
மடிந்த - அழிந்த.  தேறு -  தேற்றாமரம்.  முற்றுதல் - முதிர்தல்.  ஈகை-
இண்டங்கொடி. முளிதல் - உலர்தல்.  விண்டு - மூங்கில். முரிதல்-ஒடிதல்.
புன்கு-புன்கமரம். நிரைந்த-வரிசையாக இருந்தன. (4)

நிலஇயல்பு கூறியது

79.தீய வக்கொடிய கான கத்தரைதி
     றந்த வாய்தொறும்நு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி
   தன்க ரங்கொடுதி ளைக்குமே.

    (பொ-நி)பரிதி, சாயை புக்கவழி யாதென, தரைதிறந்த வாய்தொறும்
நுழைந்து திளைக்கும்; (எ-று.)

    (வி-ம்.)  தரைதிறந்தவாய்-வெடிப்புகள். சாயை-ஞாயிற்றின் மனைவி.
புக்கவழி-புகுந்த இடம். பரிதி-ஞாயிறு. கரம்-கை. ஒளிக்கதிர்.  திளைத்தல்-
தொழிலில்  இடைவிடாது பயிலல்.  ஒருகாலத்தில் சூரியன் மனைவியாகிய
சாயை   சூரியனை  நீங்கிச்  சென்றனள்  எனவும்  சூரியன்   அவளைப்
பலவிடங்களினுந் தேடித்திரிந்தனன் எனவும் கூறுவர்.               (5)