பக்கம் எண் :

48கலிங்கத்துப்பரணி

பலிஇட்ட தலை இயல்பு கூறியது

118.அரிந்ததலை உடனமர்ந்தே ஆடுகழை
    அலைகுருதிப் புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற
  நெடுந்தூண்டில் என்னத் தோன்றும்.

     (பொ-நி.)
தலையுடன் ஆடு கழை காலன் இடுகின்ற தூண்டில் என்னத் தோன்றும்; (எ-று.)

     (வி-ம்.) அரிந்த-அறுத்த. அமர்ந்து-பொருந்தி. கழை-மூங்கில். காலன்-
இயமன். குருதியாகிய தண்ணீரில் உடலாகிய மீனைப் பிடிக்க   மூங்கிலாகிய
தூண்டிலை இயமனாகிய தூண்டிற்காரன் இட்டதுபோன்று என்க.       (22)

கொள்ளிவாய்ப் பேய் இயல்பு கூறியது

119.கொல்வாய் ஓரி முழவாகக்
    கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
நல்வாய்ச் செய்ய தசைதேடி
   நரிவாய்த் தசையைப் பறிக்குமால்.

     (பொ-நி.)குழவிக்கு ஓரி முழவாகப் பேய் குழவிக்குத்   தசை  தேடி, நரிவாய்த் தசையைப் பறிக்கும்; (எ-று.)

     (வி-ம்.)கொல்வாய்- உயிர்களைக் கொல்கின்ற  வாய். ஓரி - கிழநரி.
குழவி - குழந்தை. தசை-இறைச்சி.                               (23)

காளி கோயிலின் சூழலிட இயல்பு கூறியது

120.நிணமும் தசையும் பருந்திசிப்ப
    நெருப்பும் பருத்தி யும்போன்று
பிணமும் பேயும் சுடுகாடும்
   பிணங்கு நரியும் உடைத்தரோ.

     (பொ-நி.)நெருப்பும் பருத்தியும் பிணமும் பேயும் சுடுகாடும் நரியும்
உடைத்து; (எ-று.)

     (வி-ம்.)நிணம் - கொழுப்பு. தசை-சதை; இறைச்சி. இசிப்ப - இழுப்ப. பருத்தி-செம்பருத்தி. பொன்றுதல் - இறுத்தல். பிணங்குதல் - சண்டையிடல். உடைத்து-உடையது.                                           (24)