பக்கம் எண் :

49


5. தேவியைப் பாடியது

     [ஈண்டு   அக்கோயிலில்  உறையும்  காளி  கூறப்படுகின்றாள்.காளி
அணிந்திருக்கும்  சிலம்பு, பொட்டு,  அவளது   கூத்து,  கொங்கை, உடை,
வயிறு, மேலாடை, கை, உதடு, முகம், காதணி மாலை  என்பன  அடைவே
கூறப்படுமாறு வியப்புச்சுவை  நிறைந்து  இன்பஞ்  செய்வதாகும்.]

தோற்றுவாய்

121.உவையுவை உளஎன் றெண்ணி
     உரைப்ப தென்உரைக் கவந்த
அவை அவை மகிழ்ந்த மோடி
   அவயவம் விளம்பல் செய்வாம்,

     (பொ-நி.) உவை உவை உள என்று உரைப்பதென்; அவை அவை
மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம்; (எ-று.)

     (வி-ம்.) உவை உவை உள என்று-காளிபக்கம் இன்னின்ன பொருள்
இருக்கின்றன என்று, அவை அவை மகிழ்ந்த-அவ்வெல்லாப் பொருளையும்
ஏற்று மகிழ்ந்த, மோடி-காளி.                                   (1)

இணையடிச் சிறப்புக் கூறியது

122.ஒருமலை மத்துவலித்து உலவுக யிற்றினுமற்று
     உலகுப ரித்தபணத்து உரகவ டத்தினும்அப்
பருமணி முத்துநிரைத்து உடுமணி தைத்தஇணைப்
   பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே.

     (பொ-நி.) கயிற்றினும்வடத்தினும் முத்து நிரைத்து மணிதைத்த பரிபுரம்
வைத்த பதத்தினள்; (எ-று.)

     (வி-ம்.) மலை-மந்தரமலை. மத்து - தயிர்கடைமத்து. வலித்து- மேலே
சுற்றி. கயிறு-கயிறாயிருந்த வாசுகி. பரித்தல்-தாங்குதல். பணம்- படம். உரகம்-
(ஆதிசேடனாகிய)  பாம்பு.  அ -அழகிய.  உடுமணி(யாகிய)பருமணி  முத்து
நிரைத்துத் தைத்த என  இயைக்க. மணிமுத்து - அழகிய முத்து. உடுமணி -
வானமீன்கள். இணை- இரண்டு. பரிபுரம் - சிலம்பு. உகளம்- இணை. 'உகள
பதத்தின்' என விகுதி பிரித்துக் கூட்டுக.                           (2)