கூத்தின் சிறப்புக் கூறியது 123. | அரவொடு திக்கயமப் பொழுதுப ரித்தவிடத்து | | அடியிட உட்குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில் தரணித ரித்ததெனப் பரணிப ரித்தபுகழ்ச் சயதர னைப்பரவிச் சதிகொள்ந டத்தினளே. | (பொ-நி.) திக்கயம் பரித்த இடத்து, அடி இட அசைவுறும் அப்பொழுதில் (சயதரனால்) தரணி தரித்ததென, சயதரனைப் பரவி, சதிகொள் நடத்தினள்; (எ-று.) (வி-ம்.) அரவு - ஆதிசேடன். திக்கயம் - திசையானை. அப்பொழுது -அந்தக்காலம். (குலோத்துங்கன் தாங்குதற்கு முன்) பரித்தல் - தாங்குதல். அடிஇட-கூத்தியற்ற; தன் கால்களை வைக்க. உள்குழிவு உற்று - உள்ளே பள்ளமாகி. தரணி - உலகம். தரித்தது - குலோத்துங்கன் தாங்கியமையின் நிலைபெற்றது. பரணிபரித்த புகழ்-பரணிபாடற்கேற்ற புகழையுடைய. சயதரன் -குலோத்துங்கன்; வெற்றி பூண்டவன் என்பது பொருள். பரவி-புகழ்ந்து. சதி -தாள அறுப்பு. (3) தனத்தின் சிறப்புக் கூறியது 124. | தணிதவ ளப்பிறையைச் சடைமிசை வைத்தவிடைத் | | தலைவர்வ னத்தினிடைத் தனிநுகர் தற்குநினைத்து அணிதவ ளப்பொடியிட்டு அடையவி லச்சினையிட்டு அமுதமி ருத்தியசெப் பனையத னத்தினளே. |
(பொ-நி.) தலைவர் நுகர்தற்கு நினைத்து, பொடி இட்டு, இலச்சினை இட்டு, அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினள்; (எ-று.) (வி-ம்.) தணி-வெம்மையைக் குறைக்கின்ற; தண்ணிய எனற்பாலது தணி என நின்றது, குளிர்ந்த என்றவாறு, தவளம், வெண்மை. விடை-எருது. தலைவர் - சிவன். வனம் - காடு. தனி நுகர்தல் - தாமே கொள்ளுதல். தவளப்பொடி - வெண்ணீறு. இலச்சினை - முத்திரை. வெண்ணீறே இலச்சினையாம் என்க. அரும்பொருளாதற் கேற்ப, முத்திரை இட்டுப் பாதுகாக்கப்பட்டதென்றவாறு. செப்பு - செப்புக்கிண்ணம். (4) |