பக்கம் எண் :

50கலிங்கத்துப்பரணி

கூத்தின் சிறப்புக் கூறியது

123.அரவொடு திக்கயமப் பொழுதுப ரித்தவிடத்து
     அடியிட உட்குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில்
தரணித ரித்ததெனப் பரணிப ரித்தபுகழ்ச்
   சயதர னைப்பரவிச் சதிகொள்ந டத்தினளே.

     (பொ-நி.)  திக்கயம்   பரித்த   இடத்து,   அடி  இட  அசைவுறும்
அப்பொழுதில்  (சயதரனால்)    தரணி   தரித்ததென,  சயதரனைப்  பரவி,
சதிகொள்  நடத்தினள்; (எ-று.)

     (வி-ம்.) அரவு - ஆதிசேடன். திக்கயம் - திசையானை. அப்பொழுது
-அந்தக்காலம். (குலோத்துங்கன்  தாங்குதற்கு  முன்)  பரித்தல் - தாங்குதல்.
அடிஇட-கூத்தியற்ற; தன் கால்களை  வைக்க.  உள்குழிவு  உற்று - உள்ளே
பள்ளமாகி.  தரணி - உலகம்.  தரித்தது - குலோத்துங்கன்  தாங்கியமையின்
நிலைபெற்றது.  பரணிபரித்த புகழ்-பரணிபாடற்கேற்ற புகழையுடைய. சயதரன்
-குலோத்துங்கன்; வெற்றி பூண்டவன் என்பது பொருள்.  பரவி-புகழ்ந்து. சதி
-தாள அறுப்பு.                                               (3)

தனத்தின் சிறப்புக் கூறியது

124.தணிதவ ளப்பிறையைச் சடைமிசை வைத்தவிடைத்
     தலைவர்வ னத்தினிடைத் தனிநுகர் தற்குநினைத்து
அணிதவ ளப்பொடியிட்டு அடையவி லச்சினையிட்டு
   அமுதமி ருத்தியசெப் பனையத னத்தினளே.

     (பொ-நி.) தலைவர் நுகர்தற்கு நினைத்து, பொடி இட்டு,  இலச்சினை
இட்டு, அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினள்; (எ-று.)

     
(வி-ம்.) தணி-வெம்மையைக்  குறைக்கின்ற;  தண்ணிய  எனற்பாலது
தணி என நின்றது, குளிர்ந்த என்றவாறு, தவளம், வெண்மை.  விடை-எருது.
தலைவர் - சிவன்.   வனம் - காடு.  தனி  நுகர்தல் - தாமே கொள்ளுதல்.
தவளப்பொடி  -   வெண்ணீறு.  இலச்சினை  -  முத்திரை.   வெண்ணீறே
இலச்சினையாம்   என்க.  அரும்பொருளாதற்  கேற்ப,  முத்திரை  இட்டுப்
பாதுகாக்கப்பட்டதென்றவாறு. செப்பு - செப்புக்கிண்ணம்.             (4)