பக்கம் எண் :

114

துரைகளைப் பெரியோரை அண்டிவாழ் வோர்தமைத்
     துட்டர்பகை என்னசெய்யும்
துணைகண்டு சேரிடம் அறிந்துசேர் என்றௌவை
     சொன்னகதை பொய்யல்லவே?

வரைஊதும் மாயனை அடுத்தலாற் பஞ்சவர்கள்
     வன்போர் செயித்ததன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி........குமரேசனே!-, தரையதனில் ஓடுதேர் நீள்கடலில்
ஓடுமோ? - நிலத்தில் ஓடும் தேர் நீண்ட கடலில் ஓடுமோ?, சலதிமிசை ஓடு
கப்பல் தரைமீதில் ஓடுமோ? - கடலில் ஓடும் கப்பல் நிலத்தின்மேல்
ஓடுமோ,? தண்ணீரில் உறும் முதலைதன் முன்னே கரிநிற்குமோ? - நீரில்
வசிக்கும் முதலைக்கெதிராக (நிலத்தில் வசிக்கும்) யானை நிற்குமோ?
விரைமலர் முடிப்பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால்
ஆகுமோ? - மணமிக்க மலரணிந்த சிவனார் திருமுடியிலுள்ள பாம்பினை
வெல்ல வலிமைமிக்க கருடனால் இயலுமோ?, ‘வேங்கைகள் இருக்கின்ற
காடுதனில் வேறொருவர் அஞ்சாமற் செல்லவசமோ? - வேங்கைகள்
வசிக்கும் காட்டிலே எவரேனும் அச்சமின்றிச் செல்லமுடியுமோ?,
துரைகளைப் பெரியோரை அண்டி வாழ்வோர்தமைத் துஷ்டர்பகை என்ன
செய்யும்? - தலைவர்களையும் பெரியோர்களையும் அடைந்து
வாழ்கின்றவர்களைக் கொடியவர் பகைமை என்ன செய்துவிடும்?, வரை
ஊதும் மாயனை அடுத்தலால் அன்றோ பஞ்சவர்கள் வன்போர்
செயித்தது? - மூங்கிற்குழலை ஊதும் கண்ணபிரானைச் சார்ந்ததால்
அல்லவோ பாண்டவர்கள் தங்களுடைய கொடிய போரை வென்றனர்?,
துணைகண்டு சேர் இடம் அறிந்துசேர் என்று ஒளவை சொன்னகதை
பொய்யல்லவே? - நல்ல துணையைக் கண்டு பிடித்துச் சேரத்தக்க இடம்
அறிந்து நட்புக்கொள் என்று ஒளவை கூறிய கதை பொய்யா?