பக்கம் எண் :

135

மாங்கனிக் காவரனை வலமது புரிந்துவளர்
     மதகரிக் கிளையமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மாங்கனிக்கு ஆஅரனை வலமது புரிந்துவளர் மதகரிக்கு
இளையமுருகா! - மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலம்வந்துவாழும்
யானைமுகத்தவருக்குத் தம்பியான முருகனே!, மயிலேறி........குமரேசனே!-,
வேங்கைகள் பதுங்குதலும் - புலிகள் பதுங்கி (ஒளிந்து) இருத்தலும், மாமுகில்
ஒதுங்குதலும் - பெரிய மேகக்கூட்டங்கள் விலகுவதும், விரிசிலை
குனிந்திடுதலும் - நீண்ட வில் வளைதலும், மேடமது அகன்றிடலும் -
ஆட்டுக்கடாக்கள் பின்செல்லுதலும், யானைகள் ஒடுங்குதலும் - யானைகள்
அடங்கலும், வெள்விடைகள் துள்ளிவிழலும் - வெண்மையான காளைகள்
துள்ளுதலும், மூங்கில்கள் வணங்குதலும் - மூங்கில்கள் வளைதலும், மேலவர்
இணங்குதலும் - பெரியோர்கள் ஒத்துப்போதலும், முனிவர்கள்
நயந்துகொளலும் - முனிவர்கள் (வெறாமல்) அன்புகாட்டலும், முதிர்படை
ஒதுங்குதலும் - வலிமையில் முற்றிய சேனை விலகிச் செல்லுதலும்,
வினையர்கள் அடங்குதலும் - இடையூறு செய்வோர் அமைதியாதலும்,
முதலினர் பயந்திடுதலும் - தலைவர்கள் அஞ்சுதலும், ஆங்கு அரவு
சாய்குதலும் - பாம்பு அடங்குதலும், மகிழ்மலர் உலர்ந்திடலும் - மகிழம்பூ
வாடுவதும், ஆயர் குழல் சூடுபடலும் - இடையரின் குழல் சுடப்படுவதும்,
இவை காரியங்களுக்கு அல்லாமல் - இவைகளெல்லாம் (பிற்காலத்திற்)
காரியசாதனைக்கேயன்றி, அம்புவியில் அதனால் இளைப்பு வருமோ? -
உலகில் இச்செயலால் தாழ்வு உண்டாகுமோ?

     (கருத்து) வேங்கை முதலானவை பின்வாங்குதல் பிறகு பலன் அடையவே யென்று நினைத்தல் வேண்டும்.                 (84)