|
திருப்புல்வயல்
புதுக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த ஓரூர். அங்கே
ஒரு மலையின்மீது குமரக்கடவுள் திருக்கோயிலுள்ளது. அதற்கு
அருணகிரிநாதர் திருப்புகழும் உளது - என்பர்.
இச் சதகத்தின்
இறுதியிலே, ‘பன்னிய புல்வயலில் வாலகும ரேசர்மேற்
பரிந்து ‘குருபாத தாசன்' என வருவதாலே இந்
நூலாசிரியர் பெயர்
குருபாததாசர் என அறியலாம். இவரது இயற் பெயர் முத்துமீனாட்சிக்
கவிராயரென்று கூறுகிறார்கள். வேளாளர் குலம் என்பர்.
|
பூமேவு
புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.
|
(இதன்பொருள்.)
பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் மேல் -
புவியிலே சிறப்புற்ற திருப்புல்வயலில் எழுந்தருளிய குமரக் கடவுள்பால்,
தேமேவிய சதகம் செப்ப - இனிமை பொருந்திய சதகத்தைக் கூற,
கோமேவிக் காக்கும் சரவணத்தான் - தலைமையாக இருந்து காப்பாற்றும்
சரவணத்திலே தோன்றிய முருகனும், கம்பம் - (அடியவருடைய அன்பாகிய)
கட்டுத்தறியிலே பிணிப்புண்ட, கும்பத்து ஐந்துகரம் கா குஞ்சரவணத்தான் -
குடம் போன்ற மத்தகத்தினையும் ஐந்து திருக்கைகளையும் உடைய, காட்டில்
உறையும் யானையின் வடிவத்தையுடைய மூத்த பிள்ளையாரும், காப்பு -
காவலாகும்.
(விளக்கவுரை.)
புல்லை - திருப்புல் வயல் (மரூஉ). ஒரு சொல் தன்
வடிவம் திரிந்து மருவி வருவது மரூஉ. மருவுதல்- பல நாள் பழகி வருதல்.
சென்னைப்பட்டினம் என்பது சென்னை எனவும், கோயம்புத்தூர்
கோவையெனவும், பூவிருந்தவல்லி பூவையெனவும் வருவனவும் மரூஉ ஆகும்.
|