பக்கம் எண் :

54

மிகுசுமை எடுத்தலால் - பெருஞ்சுமை தூக்குவதாலும், இளவெயில்
காய்தலால் - காலை வெயிலிற் காய்வதாலும், மெய்வாட வேலை செயலால்
- உடல் வாட்டமுற வேலைகள் செய்வதாலும், வல் இரவிலே தயிர்கள்
சருகுஆதி உண்ணலால் - கொடிய இரவிலே தயிரையும் கள்ளையும்
கீரைகளைப் போன்ற கறிகளையும் உண்பதாலும், வன்பிணிக்கு இடம்
என்பர் - கொடிய நோய்க்கு இடம் உண்டாகும் என்பார்கள்.

     (விளக்கவுரை) சருகு ஆதி என்பதனால் இஞ்சி, நெல்லி, பாகற்காய்,
கஞ்சி ஆகியவற்றைக் கொள்க.

     (கருத்து) இங்குக் கூறப்பட்டவைகளை நோய்களின் இருப்பிடம்
என்பர் வைத்தியர்கள்.                                 (30)

       31. இறந்தும் இறவாதவர்

அனைவர்க்கும் உபகாரம் ஆம்வாவி கூபம்உண்
     டாக்கினோர், நீதிமன்னர்
அழியாத தேவா லயங்கட்டி வைத்துளோர்
     அகரங்கள் செய்தபெரியோர்

தனையொப்பி லாப்புதல்வ னைப்பெற்ற பேர்பொருது
     சமர்வென்ற சுத்தவீரர்
தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
     தருமங்கள் செய்தபேர்கள்

கனவித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர்
     காவியம் செய்தகவிஞர்
கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
     கடிமணம் செய்தோர்கள்இம்

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
     மனிதரிவர் ஆகுமன்றோ!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.