|
செடி, தமயந்திக்குச் சிந்துநாட்டு
மன்னனைக் காட்டல்
156. அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய்
வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்
பூச்சிந்து நாள்தேறல் பொன்விளைக்கும் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன்.
(இ - ள்.) அம்கை - உள்ளங்கையையும்,
நெடுவேல்கண் ஆய் இழையாய் - நீண்ட வேற்படையையும்
ஒத்த கண்களையுடைய ஆய்ந்தெடுத்த அணிகளையுடையாய்,
இம்மன் - இந்த வேந்தன், வாவியின்வாய் சங்கம்
புடைபெயர - தடாகங்களிற் சங்குகள் தாமிருந்த
இடத்தைவிட்டு நகர்ந்து செல்வதால், செந்தாமரைபூ
கலங்கி சிந்தும் நாள்தேறல் - செந்தாமரை
மலர்கள் அசைந்து சொட்டி வழிகின்ற புதுத் தேனானது,
பொன்விளைக்கும் தண்பணைசூழ்-பொன்னிறமுள்ள
நெற்பயிரை வளரச் செய்கின்ற குளிர்ச்சி
பொருந்திய வயல்கள் சூழ்ந்த, மா சிந்து நாட்டான்
- பெருமை பொருந்திய சிந்து நாட்டுக்கு
வேந்தனாவன்.
(க - து.) ‘நீண்ட கண்ணினாய் !
இவ்வேந்தன், சங்குகள் நகர்ந்து செல்வதனால்
தடாகங்களிலுள்ள செந்தாமரைமலர்த் தேன்
சொட்டிவழிந்து பொன்போன்ற நெற்பயிர்களை
வளர்க்கின்ற பெருமைமிக்க சிந்து நாட்டுக்கு
மன்னனாவன்’ என்பதாம்.
(வி - ரை.) அம் + கை : அகங்கை
என்பதன் திரிபு.
1‘அகமுனர்ச் செவிகை வரினிடை
யனகெடும்’
என்னும் நன்னூல் விதிப்படி புணர்ந்தது.
உள்ளங்கையைப் போன்ற குவிந்த தன்மையும் வேலைப்
போன்ற நீட்சி ! அகற்சி கூர்மை கொடுமை
முதலியனவும் பொருந்திய கண். இவை கண்களுக்குக்
கொடுத்த அடைமொழிகள்.
சங்கம் : சங்கு ; அம்முச்சாரியை
பெற்றது. சங்குகளின் புடை பெயர்ச்சியினால்
தடாகத்திலுள்ள செந்தாமரை மலர்கள் தேனைக்
சொரிந்து அது நீருடன் கலந்து செந்நெற்பயிர்களை
வளர்க்குமென்றமையான், நாடு நாடாவளத்ததாய்
நீரும் தேனும் கலந்துசெல்லும் இடையறா நீர்வளனும்
நிலவளனும் மிக்க நாடென நாட்டின் பெருமை கூறியவாறு.
இவ்வாறே :
1. நன்னூல் : 222.
|