பக்கம் எண் :

188நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

தமயந்தி, நளமன்னனுக்கு மணமாலை சூட்டுதல்

161. விண்ணரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலம் களிகூர - மன்னரசர்
வன்மாலை தம்மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன்.

(இ - ள்.) விண் அரசர் எல்லாரும் - வானுலக நாட்டு மன்னர்கள் யாவரும், வெள்கி மனம் சுளிக்க - நாணமுற்று மனம் வருத்தமுறவும், கண் அகல் ஞாலம் களிகூர - இடம் விரிந்த இம் மண்ணுலகமக்கள் யாவரும் மகிழ்ச்சி மிகவும், மண் அரசர் தம் மனத்தே வன்மாலை சூட - பூவுலக மன்னர்கள் தம் நெஞ்சத்தில் மிக்க மயக்கமடையவும், பொன் வயவேந்தை பொன்மாலை சூட்டினாள் - திருமகளை யொத்த தமயந்தியானவள் வெற்றிமிக்க நளமன்னனுக்கு அழகிய சுயம்வர மலர்மாலையை அவன் கழுத்தில் அணிந்தாள்.

(க - து.) தமயந்தியானவள், விண்ணரசர் வெட்கமுற, உலக மாந்தர் மிக்க மகிழ்ச்சிகொள்ள, மண்ணக அரசர் தம் மனத்தே மிக்க மயக்கங்கொள்ள, நளமன்னன்னுக்குச் சுயம்வர மலர்மண மாலையைச் சூட்டினாள் என்பதாம்.

(வி - ரை.) விண்ணரசர் - தேவருலகிலுள்ள இந்திரன் முதலிய தேவர்கள். வெள்குதல் - நாணமுறுதல். ஞாலம் - மண்ணுலகம். வன்மாலை - வலிமையான மாலை : மிக்க மயக்கம். மால் - மயக்கம். இங்கே எதுகை நயம் நோக்கி ஐகாரச் சாரியை பெற்றது. பொன்மாலை - பொன் போன்று மதிக்கத் தகுந்த மாலையென்று கொள்ளலுமாம். பொன் - இலக்குமி. அவள் போன்றாளைப் பொன்னென்றது ஆகுபெயர். பொன் : மகளிர்களுக்கெல்லாம் பொன்போன்று மேலாக மதிக்கத் தகுந்த கற்பும் பொற்பும் உருவுந் திருவும் ஒத்த பண்புடையாள் என்று கோடலுமாம். பொன் உலகில் உயர்வாக மதிக்கத்தக்க பொருள் ; அதை நெருப்பிலிட்டுப் புடம் போடப்போட, ஒளிமிகுவது; அதுபோல, தமயந்தியும் தான்துன்பமுற்றாலும், தன் கற்புத்திறம் மேன்மேல் உயர்வுற மனத்திண்மைபெற்ற கனங்குழையாகலான் ‘பொன்’ என்றார் என்றலுமாம். சுளிக்க களிகூர சூட முதலிய செயவெனெச்சங்கள் நிகழ்காலங் காட்டி நின்றன. (154)