|
இந்திரன், கலிமகனுக்கு நளன் பெருமையும்
தமயந்தியின்
கற்பின் பொற்பும் உரைத்துச்
செல்லுதல்
168. வாய்மையம் சேங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப்
போனான்
அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு.
(இ - ள்.) அடும் கொற்ற
வச்சிரத்தான் ஆங்கு நின்று - எதிரிகளைக்
கொல்லுகின்ற வச்சிராயுதப் படையையுடைய
இந்திரன் அவ்விடத்தே சிறிது தாழ்த்துநின்று,
அவன் வாய்மையும் - அந் நளமன்னனுடைய உண்மை
நெறியையும், செங்கோல் வளனும் - நெறிமுறை வழுவாத
ஆட்சியின் மாண்பும், மனத்தின் கண் தூய்மையும் -
நடுநின்ற மனத்தின் நேர்மையும், மற்று
தோள்வலியும் - இன்னும் தோளாற்றலும், பூமான்
நெடும் கற்பும் - செந்தாமரைச் செல்வியாகிய
திருமகளையொத்த தமயந்தியின் நீங்காத கற்பு
முறையும், அவர்க்கு உரைத்துப் போனான் - அக்
கலிக்கு விளக்கிச் சொல்லிச் சென்றான்.
(க - து.) இந்திரன் சிறிதுநேரம்
ஆங்கே தாழ்த்து நின்று நளனுடைய உண்மை நெறி
முதலியவற்றையும் தமயந்தியின் கற்புச்
சிறப்பையும் கலிக்கு எடுத்துக்கூறிச் சென்றான்
என்பதாம்.
(வி - ரை.) ஆடவர்க்குரிய
உயர்குணங்களிற் சிறந்தது உண்மை கடைப்பிடித்தல்
; வேந்தர்கட்குரிய சிறப்பு கோல் முறை கோடாச்
செங்கோலாட்சி ; வீரர்கட்குரிய சிறப்பு
தோளாற்றல் ; இங்கே நளமன்னனுக்கு வாய்மை,
நெறிமுறை, தோள்வலிமை முதலிய இவ்வெல்லாம்
ஒருங்கே குடிகொண்டிருத்தலால், அவைகளையெல்லாம்
கலியின் மனங்கொள்ளுமாறு கூறினான். தமயந்தியின்
சிறப்பை விளக்கும்போது, பெண்கட்கு உயிரினும்
சிறந்தது நாணம் ; அதிலும் சிறந்தது, செயிர்
தீர்காட்சிக் கற்பு என்ப ஆகலான், கற்பு என்னும்
கலங்காநிலை பெற்ற விழுமிய
பெண்தன்மையையுடையாள் என்பதையும் அவனுக்குக் கூறி,
அவர்கள்பால் அணுகுதல் சிறந்ததன்று ; ‘அணுகாதே’
எனக் குறிப்பால் உணர்த்தினான் என்க.
சொன்னவன், மெலியவனல்லன், வலியோன், தன்னினும்
தோளாற்றலினும் வாளாற்றலினும்
சிறந்தோனென்பதைக் குறித்தற்கு ‘அடுங்கொற்ற
வச்சிரத்தான்’ என்ற பெயராற் கூறினாரென்க.
பூமான் கற்பு என்பதற்கு, நிலவேந்தனுடைய கல்வி
முறையென்று பொருள்கூறலமாம். என்னை ?
|