பக்கம் எண் :

மூலமும் உரையும்203

(வி - ரை.) கணி : கணிப்பவன்; கணக்கிடுவோன். கோள்களின் நிலையைக் கணித்தலையுடையோன் என்பது பொருள். கணித்தல் என்பதிலுள்ள, தல்விகுதி கெடக் கணியென நின்ற முதனிலைத் தொழிற்பெயர். ஈண்டுத் தொழிலாகு பெயராக அஃதுடையானைச் சுட்டிற்று. கடி - சிறப்பு. பிற மணங்கள் போலன்றிக் காதலாற் பிணிப்புண்டு இயற்கைவழி நிகழ்ந்த சுயம்வரமாகலான், ‘கடி மணம்’ என்றார். மணமும் என்பதில் உள்ள உம்மை முன்சுயம்வரமன்றித் திருமணமும் நிகழந்ததென்றதைக் குறித்தலால் இறந்தது தழீஇய எச்சவும்மை. அணிமொழி - அழகிய சொல். அஃதாவது, மெல்லிய இனிய மழலைச் சொல். அஃதுடையாளைக் குறித்தலால், பண்புத் தொகைநிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. அண்ணல் - பொருந்துதல், சேர்தல் என்னும் பொருட்டு. அஃது பெருமை பொருந்துதல் என்னும் பொருளாய் அஃதுடைய நளவேந்தனுக்கானதால் தொழிலாகு பெயர். ‘அணி மொழி’ எனத் தமயந்தியை முன்வைத்து, ‘அண்ணல்’ என நளனைப் பின்வைத்தது, கற்புக் கடம்பூண்ட பொற்புடையளாகலின் என்க. என்னை ? இளங்கோவடிகள் ஆக்கியருளிய செஞ்சொற் காப்பியத்தில் ‘ஈகைவான் கொடியன்னாள்’ எனக் கண்ணகியாரை முன்வைத்தும், ‘இருநிதிக்கிழவன் மகன்’ எனக் கோவலனாரைப் பின்வைத்தும் கூறியதுபோல் கொள்க. பணிமொழியார் - தாழ்மையான சொற்களையுடையார் : ஈண்டு ஏவற்பெண்களைக் குறித்தது, ஒன்றொழி பொதுச் சொல். ஏவல் செய்வோர்க்குப் பணிந்த மொழியும் தாழ்ந்த பண்பும் இருக்கவேண்டிய முதன்மையாகலான், ‘பணிமொழியார்’ என்றார். அறை - அறுக்கப்படுவது : வரையறுத்த இடத்தைக் குறிப்பதால் இதுவும் தொழிலாகு பெயர். (165)

சேர்க்கை வகை கூறுதல்

173. செந்திருவின் கொங்கையினும் தேர்வேந்தன் ஆகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்
நஞ்சும் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சும் தொடுத்தான் அவன்.

(இ - ள்.) செந்திருவின் கொங்கையினும் - செம்மையிற் சிறந்த திருமகள் போன்ற தமயந்தியின் கொங்கைகள் மீதும், தேர்வேந்தன் ஆகத்தும் வந்து உருவ - தேரையுடைய நளமன்னன் மார்பின் மீதும் பாய்ந்து ஊடுருவிச் செல்லும்படி, வார்சிலையை கால்வளைத்து - நீண்ட கரும்பு வில்லின் நுனியைப் பற்றி வளைத்து, வெம்தீயும் நஞ்சும் தொடுத்த அனைய - வெப்ப