பக்கம் எண் :

218நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

மொய்க்க, அவைகளைத் தன் கையால் தடுக்கிறாள்; அக் கைகளையும் அவை காந்தட் பூக்கள் என்று எண்ணி மொய்ப்பதைப் பார்’ என்று, நளன் தமயந்திக்குக் காட்டினான் என்பதாம்.

(வி - ரை.) மலர் கொய்கின்ற பெண்ணோருத்தியின் முகத்தையும் கைகளையும் வண்டுகள் தாமரை மலரெனவும் காந்தள்மலரெனவும் கருதி மயங்குதலால் மயக்கவணி. படிவண்டு: வினைத்தொகை. அக் கைமலரையும் எனற்பாலது, ஈண்டுச் செய்யுள் இசைநோக்கி எச்ச உம்மை மறைந்து நின்றது. மலர்க்கை: கைமலர் என வந்தது சொன்னிலை மாறிய இலக்கணப் போலி. அச்சமுற்றார்க்கு உடல் நடுக்குறுதலும் அதனால் வேர்வரும்பலும் இயற்கையாதலின் ‘வேர்த்தாளை’ என்றார். (6)

நளன், தமயந்திக்கு மலர்கொய்யாது தளிரைக் கொய்பவளைக்
காட்டல்

185. புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.

(இ - ள்.) செம்மலரில் தேனே - செழித்த தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகள் போன்றவளே! புல்லும் வரிவண்டைக் கண்டு-(ஓர் மலரில்) தம் துணையாகச் சேர்ந்திருக்கின்ற வரிகளையுடைய (ஆண், பெண்) வண்டுகளைப் பார்த்து, புனமயில்போல் - வனத்தில் வாழ்கின்ற மயிலைப்போன்று, செல்லும் மடந்தை - போகின்ற பெண்ணொருத்தி, சிலம்பு அவித்து மெல்லப் போய்தன் காற்சிலம்பொலி கேட்காதவாறு அடக்கிக்கொண்டு பைய நடந்து சென்று, அம் மலரைக் கொய்யாது - அந்த மலரைக் கொய்யாமல், அரும் தளிரைக் கொய்வாளைத் தெளி - அரிய தளிர்களைக் கொய்கின்றவளை அறிவாயாக.

(க - து.) ‘பூவினிற் கலவியில் திளைத்துக் களித்திருக்கும் வண்டை கண்டு மெல்லச் சென்று அப்பூவைக் கொய்யாமல் தளிர்களைக் கொய்கின்ற தையலாள் ஒருத்தியைப் பார்’ என்று நளன் தமயந்திக்கு காட்டினான் என்பதாம்.