தூய மலர்போல் நுரைத்தொகையும் முத்துஞ்
சிந்திப் புடைசுருட்டிப்
பாய லுதறிப் படுப்பதே யொத்த
திரையின் பரப்பம்மா’
என வருதல் காண்க. ஏற்றம்-உயர்ச்சி :
பெருமை. ஏற்ற எனப்பிரித்து, பொருந்திய என்று
பொருள் கொள்ளலுமாம். புலவித் தோற்றம் -
புலவிக்குரியதுபோல் காணப்பெறுந் தன்மை. வளை -
சங்கு. சங்கிலிருந்தும் முத்துக்கள் பிறக்குமென்பது
அறிந்த உண்மையாகலான், ‘வளை முத்தம்’ என்றார்.
(9)
நளன், தமயந்திக்குச் சோலையின்
அழகைக்காட்டிக் கூறல்
188. அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக்-கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை அழகு.
(இ - ள்.) அல் என்ற சோலை அழகு -
(ஞாயிற்றின் ஒளி உள்ளே செல்ல இயலாத
அடர்த்தியினால்) இருளென்றே பார்த்தோர்
கூறத்தக்க சோலையின் அழகானது, அம் மலர் மேல்
கொம்பு - அழகிய மலரையுடைய உயர்ந்த கிளைகள்,
அலர்ந்த மலர் சிந்தி - தம்மிடத்தே மலர்ந்துள்ள
பூக்களைக் கீழே உதிர்த்துச் சிதறி, புலர்ந்து
அசைந்து - வாடியசைதலால் (அக்காட்சி), பூஅணைமேல் -
மலர்ப் படுக்கையின்மேல், புல்லிக் கலந்து
ஒசிந்த - (தம் நாயகரைத்) தழுவிப் புணர்ந்து
வாட்டமுற்றிருக்கின்ற, புல் என்ற கோலத்துப்
பூவையரைப் போன்றது - அழகொளி குறைந்திருக்கின்ற
மங்கையர்கள் போலக் காட்சியளிக்கின்றது.
(பார்)
(க - து.) ‘சோலைகளிலுள்ள
மரக்கிளைகள் மலர்களைச் சிந்தி அவைகளின்மேல்
ஆடுதல், பூவணைமேல் தங்கள் நாயகரைப் புணர்ந்து
வாடியிருக்கும் பெண்கள் போன்றிருக்கின்றது பார்
என்றான்’ என்பதாம்.
(வி - ரை.) பூக்கள் பரப்பிய
மெத்தையின்மேல் பெண்கள் தம் காதலருடன் கலந்து
எழுந்தபோது, கூந்தல் மேலும் கழுத்தினும்
அணிந்திருந்த மலர்மாலைகள் சிதைந்து கீழேவிழ,
கூந்தல் சோர, இடை நுடங்கச் சோர்வுற்று நிற்பது
இயற்கை. அது
|