பக்கம் எண் :

232நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

(இ - ள்.) சோர்புனலின் மூழ்கி எழுவாள் - ஓடுகின்ற நீரில் குளித்து எழுந்திருப்பவளுடைய, சுடர் நுதல்மேல் - ஒளிமிக்க தன் நெற்றியின்மீது, வார்குழலை நீக்கி வரும் தோற்றம் - படிந்துள்ள கூந்தலை ஒதுக்கிக்கொண்டு வருகின்ற காட்சி, மேகத்து இடையே விரைகொண்டு எழுந்த பிறை பொற்பு - மேகத்திற்கு ஊடே விரைவில் தோன்றிய நிலாப்பிறையினது அழகை, புரைகின்றது என்னல்ஆம் பாராய் - ஒத்திருக்கின்றதென்று சொல்லலாம்; நீ காண்பாயாக.

(க - து.) ‘நீரில் குளித்துவரும் இம்மங்கை தன் நெற்றியிற் படிந்துள்ள கூந்தலைத் தன் கைகளினால் ஒதுக்கிக்கொண்டு வருகின்ற காட்சி, மேகத்தின் நடுவே விரைந்துதோன்றும் நிலாப் பிறையைப்போல் காண்பதை நீபார்’ என்று நளமன்னன் தமயந்திக்குக் காட்டினான் என்பதாம்.

(வி - ரை.) நீரில் மூழ்கி வருபவள், தன் நெற்றியிற் படிந்து கிடந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டுவருவது, மூன்றாம் பிறை மேகத்திடையே தோன்றுவதுபோற் காட்சியளிப்பதாகக் குறித்தார். சோர்தல் - பாய்தல் : ஓடுதல். எழுவாள்: எதிர்கால வினையாலணையும் பெயர். புனைதல் - ஒத்திருத்தல். பொற்பு - அழகு. (17)

நளன், தமயந்திக்குக் கழுநீர்மலர் கொய்வாளைக் காட்டல்

196. செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீலம் என்றயிர்த்து முன்னர்க் - கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேல்தடக்கை மன்.

(இ - ள்.) வை ஆரும் வேல்தடக்கைமன் - கூர்மை பொருந்திய வேலை யேந்திய பெரிய கைகளையுடைய நளமன்னனானவன், செம்குவளை கொள்வாள் - சிவந்த கழுநீர்மலரைக் கொய்கின்ற ஒருத்தி, செழுநீலம் நோக்கு எறிப்ப - குளிர்ச்சி மிக்க கருங்குவளை மலர் போன்ற தன் கண்பார்வையொளி அதன்மேற்படிய, முழுநீலம் என்று அயிர்த்து - நிறைந்த கருங்குவளை மலரென அதனை ஐயங்கொண்டு, முன்னர் கழுநீரை கொய்யாது போவாளை - தன் முன்னுள்ள செங்கழுநீர் மலரினைப் பறிக்காமல் செல்கின்றவளை, கோல்வளைக்குக் காட்டினான் - அழகிய. வளையலையணிந்த தமயந்திக்குக் காண்பித்தான்.