வைத்துக் கூறினார். எனவே அங்குச்
செல்வமும் கல்வியும் சிறந்திருப்பதால் செல்வச்
சிறப்பினால் வருந்தி வந்தவர்க்கீதலும் விருந்து
புறந்தருதலும் அருந்தவரைப் பேணுதலுமாகிய அறமும்,
கல்விச் சிறப்பினால் ஆடலும் பாடலும்
அரும்பொருள் ஆய்தலும் கற்றலும் கேட்டலும் சிறந்து
களிப்புமிக்கவர்களாக இன்பவாழ்வும் பெற்று
வாழும் சிறப்பும் குறித்தார் ஆயிற்று. எனவே
அந்நகரின் கல்வி செல்வப் பெருமிதங்களைச்
சுட்டிக் காட்டியவாறாம்.
அந்நகர் மாடங்களின் பெருமை
21. நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.
(இ - ள்.) தென்றல் அலர்த்தும்
கொடிமாடத்து - தென்றற்காற்று விரித்து
அசைக்கின்ற கொடிகள் கட்டியுள்ள மாளிகைகளில்,
ஆய் இழையார் ஐம்பால் புலர்த்தும் புகை வான்
புகுந்து - (தமக்கேற்ற அணிகளை) ஆராய்ந்தெடுத்து
அணிந்துள்ள பெண்கள் தம் கூந்தலுக்கு ஈரம்
புலர்த்தும் நறும்புகை வானிடமெல்லாம் சென்று
நிறைந்திருப்பதால், வானம் நின்று புயல்
பொழிந்த நெடும்தாரை - வானத்தில் பரவி நின்று
மேகங்கள் பெய்த நீண்ட மழைத்தாரைகள் யாவும்,
என்றும் அகில் கமழும் என்பர் - எக்காலத்தும்
அகிலின் நறுமணம் கமழ்ந்து கொண்டே
இருக்குமென்பார்கள்.
(க - து.) அந்நகர்
மேல்மாடங்களினின்றெழும் புகையினால்
மழைநீர்த்தாரையும் அகில்மணங்கமழும் என்பதாம்.
(வி - ரை.) ‘நின்று புயர் வானம்’
வானம் நின்று புயலெனக்கொண்டு கூட்டிப் பொருள்
உரைக்கப்பட்டது. நெடும்தாரை பண்புத்தொகை.
மண்ணிடம் அந்நகரில் கலவைச் சேறால்
நிரம்பியது. விண்ணிடம் அகிற்புகையால்
நிரம்பியது. மேலும் கீழும் மணங்கமழ்ந்து
கொண்டேயிருக்கும் பெற்றியது மாவிந்த நகரம்
என்று அதன் செல்வ மேன்மை இங்கும்
விரித்துரைத்தவாறாம். (14)
அந்நகர் மக்களின் சிறப்பு
22. வெஞ்சிலையே கோடுவன மென்குழலே
சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்கம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.
|