பக்கம் எண் :

மூலமும் உரையும்245

(வி - ரை.) அம் கை - அங்கை : அழகியகை. வெற்றிவீரனாகலின் நளனை ‘அங்கை வேல்மன்னன்’ என்றார். அகங்கை : உள்ளங்கை எனக் கொள்ளலுமாம்,

1‘அகமுனர்ச் செவிகை வரின்இடை யனகெடும்’

என்பது விதியாகலான். அவ்வாறு இடையினின்ற ககரவுயிர் மெய் கெட்டதெனக் கொள்க.

நளமன்னன் மார்பை வயலாகவும், தமயந்தியின் கொங்கைகளை ஏராகவும், கலவியால் தோன்றும் சிறு வியர்வை வயலில் நிரப்பிய நீராகவும், காதலை அவ் வயலுக்கு உரிய வரப்பாகவும், அதனால் உண்டான இன்பத்தை (நெற்) பயிராகவும் உருவகம் செய்தார்.

பட்டினத்தடிகள் இறைவன் பத்தியால் விளையும் பேரின்பத்துக்கு இவ்வாறே உருவகம் செய்ததூஉம், அப்பரடிகள் உருவகஞ் செய்ததூஉம் அறிந்து அறிந்து இதனோடு ஒப்பவைத்து இன்புறற்பாலன். அவை :

2‘பாதவம் மிருகம் பறவை மானிடர்
ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
மாவுறை மருமக் காவ லாளர்
வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்
..........................................
ஒருசில வற்றைநின் திருவடி வீட்டில்
சேர்த்தனை’

என்பதும்,

3‘மெய்ம்மையாம் உழவைச்செய்து விருப்பெனும் வித்தைவித்திப்
பொய்ம்மையாம் களையைவாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக்கண்டு தனவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையுமன்றே’

என்பதும் காண்க. கோதையர் - மகளிர். அவர்களுள் மேலான கொம்பென்றது, கற்புக்கடன்பூண்டு கொண்டானிற் சிறந்த தெய்வமின்றெனத் தமயந்தி கொண்ட சிறந்த மேம்பாட்டினால் என்க. என்னை?

1. நன்னூல் : 222. 2. திருக்கழுமல மும்மணி : 25.
3. திருநாவுக், தேவாரம், பதி, 76 : 2.