பக்கம் எண் :

மூலமும் உரையும்247

பாகக் கொள்ளுதல் சிறந்தது. மூரி - வலிமை : அலைகள் எதையும் தகர்த்துக்கொண்டு செல்லும் வலிமைமிக்கதாதலால் ‘மூரித்திரை’ என்றார். மென்கிடங்கு - சிறிய சிறிய கழிக்குண்டுகள் : சேறுள்ள பள்ளங்கள். திரையேற சேலேற என்னும் செயவெனெச்சங்கள், காரணப்பொருட்டாக நிகழ்காலங்காட்டி நின்றன. கங்கையாற்றின் வளத்தை இவ்வாறு சுட்டிக்காட்டினார். ‘கண்ணுற்றான்’ என, ஒருமை முடிபு ஏற்றது, சிறப்புப்பற்றி. (26)

நளமன்னனும், தமயந்தியும் அங்கோர் சோலையை அடைதல்

205. சூதக் கனியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்கும் குப்பியென - மாதரார்
ஐயுற்று நோக்கும் அகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேல்தானை மன்.

(இ - ள்.) வை உற்ற வேல்தானை மன் - கூர்மை பொருந்திய வேற்படை தாங்கிய சேனையையுடைய நளமன்னன், சூதகனி ஊறல் - மாங்கனிகள் ஒழுக்கிய அதன் சாற்றினை, ஏற்ற வாழை சுருள் - தன்னிடத்திற் கொண்டுள்ள இளவாழைக் குருத்துக்கள், கோதுஇல் நறவு ஏற்கும் குப்பி என - தெளிவுள்ள தேனைக்கொண்டுள்ள புட்டில்கள் என்று கருதி, மாதரார் - பெண்கள், ஐஉற்று நோக்கும் - ஐயங்கொண்டு ஐயந்தெளிவுறப் பார்க்கின்றதான, அகன்பொழில் சென்று எய்தினான் - விரிந்த ஒரு சோலைக்குப் போய்ச் சேர்ந்தான்.

(க - து.) நளமன்னனானவன், மாங்கனிச் சாற்றைத் தாங்கிய இளவாழைக் குருத்துக்களைப் பெண்கள் தேன் நிறைந்துள்ள புட்டிலென்று கருதி ஐயங்கொண்டு ஐயந்தெளிவுறப் பார்க்கின்றதான வளனுடைய ஓர் விரிந்த சோலைக்குப் போய்ச் சேர்ந்தான் என்பதாம்.

(வி - ரை.) சூதக்கனி - மாங்கனி. சோலையில் மாவும் பலவும் வாழையும் தெங்கும் பிறவும் சூழடுத்து நெருங்கியிருப்பது இயற்கை. இவ்வாறு இருக்குமென்பதை ஏமாங்கத நாட்டு இயற்கை வளத்தை எடுத்தியம்பப் போந்த திருத்தக்கதேவர் தாம் ஆக்கியருளிய சிந்தாமணிப் பெருங்காப்பியத்தில்,

1‘காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து

1. சீவகசிந், நாமகள் : 2.