|
நளன், தமயந்தியுடன் பன்னிரண்டாண்டுவரை
வாழ்தல்
207. பொய்கையும் வாசப் பொழிலும் எழிலருவிச்
செய்குன்றும் ஆறும் திரிந்தாடித் - தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தான் அடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ.
(இ - ள்.) அடையலரை கூறு இரண்டு ஆ
கொல் யானை கோ - தன் பகைவர்களை உயிர்வேறு
உடல்வேறாகப் பிரித்து இரண்டு பகுதிகளாகும்படி
கொல்கின்ற யானைப் படையையுடைய நளமன்னன்,
தையலுடன் - தன் காதற் கிழத்தியாகிய
தமயந்தியோடு, பொய்கையும் வாசப் பொழிலும் -
குளங்களிலும் (மலர்) மணம் பொருந்திய
சோலைகளிலும், எழில் அருவிச் செய்குன்றும் -
அழகிய அருவி நீரைப் பெருக்குகின்ற மலைகளிலும்,
ஆறும் திரிந்து ஆடி - ஆறுகளினும் சென்று சென்று
இன்பத்துடன் மூழ்கி விளையாடல் கொண்டு, ஆறு இரண்டு
ஆண்டு எல்லை கழித்தான் -
பன்னிரண்டாண்டுக்காலம்வரை (மகிழ்ச்சியாகப்)
பொழுது போக்கினான்.
(க - து.) நளமன்னன், தமயந்தியோடு
தடாகங்களினும் சோலைகளினும் மலையருவிகளினும்
ஆறுகளினும் சென்று சென்று மூழ்கி,
விளையாடல்கொண்டு, இன்பமாகப்
பன்னிரண்டாண்டுக் காலம்வரை வாழ்ந்தான்
என்பதாம்.
(வி - ரை.) செய்குன்று -
விளையாடுதற்குக் கட்டப்பட்ட செயற்கைமலை
என்றும் பொருள் கொள்ளலுமாம். அருவி எனவருதலால்,
அருவிகள் வருதற்குரியது மலைகளென்று ஈண்டுப் பொருள்
உரைத்தாம். அடையார் - பகைவர். யானை குதிரை தேர்
காலாள் என்னும் படைகள் நான்கனுள், யானைப் படை
சிறந்ததாகலானும், விரைந்து தன் வலிமையினால்
சிறிதும் வருத்தமின்றி அழிக்கும்
தன்மையுடையதாகலானும், யானைப் படையையே
முதன்மையாகக்கொண்டு ‘கொல் யானைக்கோ’
என்றார். கொல்யானை: முக்கால வினைத்தொகை.
யானை என்பது அதனானாகிய படையை உணர்த்தலால்
காரியவாகுபெயர். கூறு இரண்டு - இரண்டு கூறு :
சொன்னிலை மாறிய இலக்கணப் போலி. இரண்டு
கூறாக்கலாவது, பகைவர்தம் உடலையும் உயிரையும்
பிரித்துத் தனித் தனியாக்கிக் கொல்லுதல்.
அன்றித் தலைவேறு, உடல் வேறாகத் துண்டாக்குதல்
என்று கூறலுமாம். (29)
|