பக்கம் எண் :

மூலமும் உரையும்257

(இ - ள்.) புன்னை நறுமலரின் பூந்தாது இடை உறங்கும் - புன்னையின் மணமுள்ள பூக்களினின்றுதிரிந்த மகரந்தப் பொடிகளின்மீது படுத்துறங்குகின்ற, கன்னி இளமேதி கால்குளம்பு - மிக்க இளமையையுடைய எருமைகளின் காலிலுள்ள குளம்படிகள், பொன் உரைத்த கல் ஏய்க்கும் நாடன் . பொன்னினை உரைத்த கட்டளைக் கற்போல் இருக்கின்ற தன்மையைத் தருகின்ற நெய்தல் நிலநாட்டுக்கு வேந்தனாகிய புட்கரன், கவறுஆட - நளனுடன் சூதாடுதற்கு, கொல் ஏற்றின்மேல் ஏறிக்கொண்டு போயினான் - கொல்லுந்திறம் பெற்ற எருதின்மேல் ஏறிக் கொண்டு (நிடத நாட்டை நோக்கிச்) சென்றான்.

(க - து.) புட்கரமன்னன், கலி வேண்டியவாறு நளனுடன் சூதாடுவதற்கு ஒரு கொல் எருதன்மேல் ஏறிக்கொண்டு நிடதநாட்டை நோக்கிச் சென்றான் என்பதாம்.

(வி - ரை.) புன்னை நறுமலர் : புன்னையினது மணமுள்ளபூ: புன்னை நெய்தல்நிலக் கருப்பொருள். அதன் மகரந்தப் பொடிகள் எங்கும் உதிர்ந்து நிலனே தோன்றாதவாறு கிடக்கின்றன. அதன் மீது படுத்துறங்கும் இளஎருமைகள் மீதும் கால்களின் குளம்புகளினும் அவை ஒட்டிக்கொள்கின்றன. அதனால் எருமையின் கருநிற உடலும் குளம்புகளும் பொன்படிந்தனபோற் காணப்படுகின்றன. புன்னையின் மகரந்தப்பொடியின் நிறம், பொன் போன்று மஞ்சள் நிறமாக இருத்தலானும், அதன் காற்குளம்பு கருநிற மாதலானும், அவைகளில் பதிந்துகொண்டிருத்தலானும் பொன்னுரைத்த உரைகல்போல் தோற்றமளித்ததையே இங்கு ‘பொன் உரைத்தகல் ஏய்க்கும்’ என்றார். பிறரும்

1‘பொன்னுரைகற் போன்ற குளம்பு’

என்றதும்,

2......பொன்னுருள் உரைத்துரைத் தோடி
இருண்ட கல்லையும் தன்னிற மாக்கிய இரதம்’

என்றதும் காண்க. இத்தன்மையினால் கடற்கரைசார்ந்த நெய்தல் நிலப்பாங்குள்ள நாட்டுக்குரியோன் என்பதும் தெளிவுபடுகின்றது. இதனால் அப்புட்கரன் நாட்டுவளங் கூறினார். புன்னை மகரந்தப்பொடி பொன்போல் தோன்றும் நாடன் என்றதனால், நல்லோன் போன்று வெளிக்குக் காட்டித் தீமை செய்தற்குரியோன் என்னும் உள்ளுறை உவமமும் தோன்ற நின்றது. கொல் ஏறு : முக்கால வினைத்தொகை. (35)

1. முத்தொள்ளாயிரம் : 13. 2. கம்பரா, வரைக் : 8.
ந. - 17