பக்கம் எண் :

மூலமும் உரையும்35

தன் கால்களின் செந்நிற மிகுதியினால் அங்குள்ள தடாகத்தின் நீருள்ள இடமெல்லாம் செந்நிறமாகக் காட்டவும், தோன்றிற்று - அங்கு வந்தது.

(க - து.) அச்சோலையிடத்தே அங்குள்ள தாமரை மலரில் வாழும் அன்னப் பறவை நளனுக்கு முன் தோன்றிற்று என்பதாம்.

(வி - ரை.) நீள் நிறம் : வினைத்தொகை. தாள் நிறம்: ஆறாம் வேற்றுமைத் தொகை. அன்னத்தின் உடலின் வெண்ணிற ஒளியும், கால்களின் செந்நிற ஒளியும் சோலையை வெண்ணிறமாகவும், நீர்நிலையைச் செந்நிறமாகவும் மாற்றிற்று. அதன் வெண்ணிறமும் காலின் செந்நிறமும் விளங்குதல் காண்க. அஃதாவது அன்னத்தின் சிறப்புக் கூறியவாறு. முளரி - முட்களையுடையதென்னும் பொருளாய்த் தாமரை மலரைக் குறித்தது: ஆகுபெயர். நிறத்தான்-மார்பையுடையான் என்று கூறலுமாம். அப்பு - நீர் : தொட்டால் ஒட்டுதலையுடையதென்பது பொருள். ‘உள்’-, ஏழாம் வேற்றுமை இடப்பொருளுருபு, பிறிதின் கிழமைப் பொருளில் வந்தது. (23)

நளன், அன்னத்தைப் பிடிக்கச் சேடி ஒருத்தியை ஏவுதல்

31. பேதை மடவன்னம் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலமேறி மென்கரும்பைக் - கோதிக்
கடித்துத்தான் முத்துமிழும் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து.

(இ - ள்.) மேதி குலம் ஏறி - எருமை மந்தை (கொல்லைகளில்) சென்று, மென் கரும்பை கோதி கடித்து - மெல்லிய கரும்புகளைக் கடித்துக் குதப்பி, முத்து உமிழும் (அவைகளுக்குள் இருக்கின்ற) முத்துக்களைக் கக்குகின்ற, கங்கை நீர் நாடன் - கங்கை நீர் வளமிக்க நிடத நாட்டி மன்னனாகிய நளன், பேதை பெயர்ந்து - (சேடி ஒருத்தியைப் பார்த்து) ஏ, பேதாய்! நீ போய், மட அன்னம் தன்னை பிழையாமல் பிடித்து தா என்றான் - இவ்விள அன்னத்தை தப்பிப்போக விடாமல் பிடித்துக் கொண்டு வந்து கொடு என்றான்.

(க - து.) நளன், தன் பக்கத்திலிருந்த சேடி ஒருத்தியை நோக்கி, ‘இந்த இள அன்னத்தைத் தப்பாமற் பிடித்துக் கொண்டு வந்து கொடு’ என்றான்.

(வி - ரை.) பேதை: அண்மைவிளி யாகலான் இயல்பாயிற்று.