பக்கம் எண் :

396நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

(வி - ரை.) சேதிநகர் - சேதி நாட்டுக்குத் தலைமையான நகரம். செலவிடுதல் - அனுப்புதல். நீதிகிடத்தல் - ஒழுங்கு முறையை நிலைநிறுத்தல். மன்னவர் கீர்த்தியை நடத்துதலாவது, அரசன் நெறிமுறைக்கு மாறுபடாமல் நடக்கும் கடமையுணர்ச்சி நிலை. வட்டை - வழி; பாதை. வாட்டை - பாட்டையென்பது முதல் குறுகிநின்றதெனக் கொள்க. பார் - பூமி. பரந்த இடத்தை யுடையதென்பது பொருள். நடத்துவான் என்பது இறந்தகால வினையாலணையும் பெயர். தமயந்திக்கு வழிகாட்டிவிட்டுத் தான் வணிகனாகலான் தன் தொழில் முறை நடத்துதற்கு வழி நடந்து சென்றானென முடிக்க. (137)

தமயந்தி, சேதிநாடு செல்லப் பணிப்பெண்கள் கண்டு
அவளை அந்நாட்டரசிக்கு அறிவித்தல்

316. அற்ற துகிலும் அறாதொழுகு கண்ணீரும்
உற்ற துயரும் உடையவளாய் - மற்றொருத்தி
நின்றாளைக் கண்டேம் நிலவேந்தன் பொற்றேவி
என்றார் மடவார் எடுத்து.

(இ - ள்.) மடவார் - பணிப் பெண்கள், (தமயந்தியைக் கண்டு தம் அரசியிடம்போய்) நிலவேந்தன் பொன்தேவி - சேதி நாட்டு மன்னனுக்குச் சிறந்த மனையாட்டியாரே !, அற்ற துகிலும் அறாது ஒழுகு கண் நீரும் - அறுபட்ட ஆடையும் இடையறா தொழுகுகின்ற கண்ணின் நீரும், உற்ற துயரும் உடையவள் ஆய் இடைவிடாதிருக்கின்ற வருத்தமும் உள்ளாளாகி, ஒருத்தி நின்றாளை எடுத்து கண்டேம் என்றார் - நின்றவளாகிய ஒரு பெண்ணை (இந்நகரின் ஒரு பக்கலில்) பார்த்தோமென்று விரித்துக் கூறினார்கள்.

(க - து.) சேதி அரசியின் பணிப்பெண்கள் தமயந்தியைக் கண்டு அரசியிடம்போய், ‘நிலவேந்தன் தேவியாரே! நாங்கள் ஒருத்தியைக் கண்டோம்; அவள் குறைபட்ட ஆடையும், குறையாத அழுகையும் உடையளாய் இருக்கின்றாள்’ என்று விரித்துக் கூறினார்கள் என்பதாம்.

(வி - ரை.) அற்ற துகில் - முன்றானையில் கரைகள் இன்றி வெட்டுப் பட்டுள்ள ஆடை. அறாது ஒழுகு கண்நீர் - தன் நிலையை எண்ணியெண்ணி ஏங்குதலால் கண்களிலிருந்து ஊற்றெடுத்தொழுகும் கண்ணின் அழுகை நீர். அற்ற, அறாத என்பன,