பக்கம் எண் :

410நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

தண்டூன்றா’ என்னும் நாலடியும் காண்க. வடிவு - ஆகுபெயர். கோதுதல் - ஒதுக்குதல், அல்லது ஒடித்தல் என்றுரைத்தலுமாம். குருகு - பறவைப் பொதுப் பெயர். அது ஈண்டு நாரை கொக்கு முதலிய நீர்வாழ் பறவைகளைச் சுட்டிற்று. தண் - குளிர்ச்சி. குளிர்ச்சியுள்ள நீரைக் குறித்தது குணவாகு பெயர். சேதி - சேதி நாடு. (149)

சேதியரசன் தமயந்தியை அவள் தந்தை நகருக்கு
அனுப்புதல்

328. கந்தனையும் கன்னியையும் கண்டா யினுஞ்சிறிது
தன்துயரம் தீர்ந்து தனியாறத் - தந்தை
பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு.

(இ - ள்.) சேதியர்கோன் - சேதிநாட்டு வேந்தனானவன், பண்டை விதியிலே போந்தாளை - முன்செய்த ஊழ்வினையினால் (தன்னிடத்து) வந்துசேர்ந்த தமயந்தியை, கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் - முருகவேளையொத்த தன் மகனையும் இளையளாகிய தன் மகளையும் பார்த்த பின்னராவது, சிறிது தன் தனி துயரம் தீர்ந்து ஆற - அவள் தான் தனித்திருப்பதால் ஆன கவலை நீங்கிச் சிறிது மனம் ஆறுதல் பெற, தந்தை பதியில் மீண்டு போக்கினான் - தமயந்தியானவளைத் தன் தந்தையின் நகரமாகிய குண்டினபுரத்துக்குச் செல்ல அனுப்பினான்.

(க - து.) சேதிநாட்டு மன்னன் தமயந்தி தன் மக்களைக் கண்டாலாவது தன்னந்தனியாக இருப்பதால் உண்டாம் துன்பம் சிறிது தணியுமெனக் கருதிக் தமயந்தியை அவள் தந்தையர் நகராகிய குண்டினபுரத்துக்கு அனுப்பினான் என்பதாம்.

(வி - ரை.) கந்தன் - முருகக் கடவுள். முருகன் கட்டழகுடையான் ஆதலால் அவன்போன்ற நளனைக் ‘கந்தன்’ என ஆகுபெயராக்கிக் கூறினார். கன்னி - இளம்பெண். தமயந்தியின் மகள். முற்றத்துறந்த முனிவரர்களும், இளங்குதலைச் சிறுவர்களைக் கண்டால் பற்றுக்கொண்டு இன்புறுவர். அவ்வாறிருக்கத் தான் பெற்றெடுத்த மக்களைக் காணின், குழந்தைகளின் அமிழ்தினுமினிய இன்சொற்கேட்பின் துயரம் மாறுவள் என்பதைக் கருதினான் சேதிமன்னன் என்பாராய்க் ‘கந்தனையும் கன்னி