|
யையும்............போக்கினான்’
என்றார். ‘கண்டாயினும்’ என்பதிலுள்ள உம்மை
சிறப்புப் பொருளில் வந்தது. ஆற : செயவெனெச்சம்.
தனி - தனிமை, ஒன்றி : தன்னோடு தொடர்புடையார்
யாருமில்லாது இருத்தல். விதியில் என்பதிலுள்ள
இல் ஏழனுருபு வேற்றுமை மயக்கம். விதியால் என
மூன்றனுருபு இவ்வாறு மயங்கிவந்தது. இங்கே அதனைக்
கருவிப் பொருளாகக் கொள்ளுக, அவள் வருதற்குக்
கருவி (காரணம்) விதியே ஆகலான் என்க. போந்தாள் -
வந்தாள். இறந்தகால வினையாலணையும் பெயர். (150)
தமயந்தி, குண்டினபுரத்துக்குப்
போனபோது
நகரம் முழுதும் மயங்குதல்
329. கோயிலும் அந்தப் புரமும் கொடிநுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியவே - தீயகொடுங்
கானாள மக்களையும் கைவிட்டுக் காதலன்பின்
போனாள் புகுந்த பொழுது.
(இ - ள்.) தீய கொடும் கான் ஆள -
தீமைமிக்க கொடிய காட்டில் திரிந்து வருந்த,
மக்களையும் கைவிட்டு - (தன் ஆருயிர் போன்ற)
மைந்தர்களையும் பற்றற விட்டுவிட்டு, காதலன்
பின் போனாள் புகுந்தபொழுது - தன் கணவனுடன் சென்ற
தமயந்தியானவள் (தனியே வந்து) சேர்ந்த
காலத்தில், கோயிலும் அந்தப்புரமும்-(வீமமன்னன்)
அரண்மனையிலுள்ள ஆடவர்களும் அந்தப்புரத்திலுள்ள
பெண்களும், கொடிநுடங்கும் வாயிலும் நின்று
மயங்கியவே - கொடிகள் பறந்து அசைகின்ற வாயிலில்
நின்ற ஊர் மக்களும் செயலற்று நின்று
(தமயந்தியின் துன்பத்திற்காகத்)
திகைப்படைந்தார்கள்.
(க - து.) மக்களையும் பிரிந்து தன்
கணவன் நளனுடன் கொடிய காட்டிற்குச் சென்ற
தமயந்தியானவள் தன்னந்தனியாக குண்டினபுரத்துக்கு
வந்தகாலத்தில் ஊரிலுள்ள மக்கள் எல்லோரும்
வருத்தங்கொண்டு செயலற்று நின்றார்கள்
என்பதாம்.
(வி - ரை.) கோ+இல்-கோயில் - கோ -
அரசன், இல் - வீடு - அரசன் வீடு. அது
கோட்டைகளையுடையதாய்ப் பாதுகாப்பு மிக்கதாய்
இருக்குமாகலான், அரண்மனையெனப்பட்டது.
பிற்காலத்தில் இவ்வழக்காறொழிந்து, கடவுளர்
உருவமைத்து வழிபடும் இல்லத்தைக் குறிப்பதாயிற்று,
இன்று கோயில் என்பது
|