பக்கம் எண் :

416நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

சொரிந்தன ; அழுதாள் ; அவன் காலடிகளில் வீழ்ந்து அலமரு வாளாயினாள். இதனை ஆசிரியர், ‘தந்தையை முன்.........வீழ்ந்தாள்’ என்றார். பட்டதே என்னப் போய் வீழ்ந்தாள் என்பதில் அவலச்சுவை நிறைந்திருத்தலை ஓர்க. படை - வேற்படை என்றலுமாம். படை: படுத்தலையுடையது என்னும் பொருளது. படுத்தலாவது : கொல்லல். கொல்லுதல் தொழிலையுடைமையால் பொதுவாக ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். 1‘படை கொண்டார் நெஞ்சம்போல்’ என்றார் பிறரும். (153)

தமயந்தியின் தாயும் தந்தையும் வருந்துதல்

332. செவ்வண்ண வாயாளும் தேர்வேந்தனும் மகளை
அவ்வண்ணம் கண்டக்கடல் ஆற்றுவரோ - மெய்வண்ணம்
ஓய்ந்துநா நீர்போய் உலர்கின்ற தொத்ததமர்
நீந்தினார் கண்ணீரின் நின்று.

(இ - ள்.) செவ்வண்ண வாயாளும் - செந்நிறமுள்ள வாயையுடைய வீமன் மனையாளும், தேர் வேந்தனும் - தேரூர்வோனாகிய வீமமன்னனும், மகளை அவ்வண்ணம் கண்டக்கால் ஆற்றுவரோ-தம்புதல்வியாகிய தமயந்தியை அந்தக் கோலத்தில் பார்க்க நேரின் மனந் தாழுவரோ (தாழமாட்டாரன்றே), மெய் வண்ணம் ஓய்ந்து - உடலின் நிலை தளர்ந்து, நா நீர் போய் உலர்கின்றது - நாவில் நீர்ப்பசையற்று வறளுவதாயிற்று, ஒத்த தமர் - இவர்களை யொத்த அன்புமிக்க சுற்றத்தோர்களும், கண் நீரின்
நின்று நீந்தினார் - கண்ணீர் வெள்ளத்தில் அமிழ்ந்து அதில் மிதந்து கொண்டிருந்தனர். (அழுத வண்ணமாக இருந்து ஏக்கங் கொண்டனர் என்றபடி.)

(க - து.) தமயந்தியைக் கண்ட அவள் தாய் தந்தையர் இருவரும் வருத்தத்தால் உடலோய்ந்து, நாவறண்டு நடுங்கினர் ; அவள் சுற்றத்தாரும் கண்ணீர் பெருக அழுதவண்ணமாக இருந்தார்கள் என்பதாம்.

(வி - ரை.) செவ்வண்ண வாயாள் : ஈண்டுத் தமயந்தியின் பெற்றதாய். தேர் வேந்தன் - தேரையுடைய வீமன் ; தமயந்தியின் தந்தை, சேய்க்குத் தந்தையினும் தாயே முதன்மையானவள். இதனானே மணிமொழிப் பெருமான் மங்கை நல்லார்க்கு நாணமே சிறந்ததெனக் குறிப்பிட்டபோது,

1. திருக்குறள் : 253.