பக்கம் எண் :

42நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

அன்னம், தமயந்தி விமராசன் மகள் எனல்

38. எழுவடுதோள் மன்னா இலங்கிழையேர் தூண்டக்
கொழுஙதியிற் சாய்ந்த குவளை - உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.

(இ - ள்.) எழு அடு தோள் மன்னா - தூணைவென்ற தோள்களையுடைய வேந்தே ! இலங்கு இழை - (நான் சொன்ன அந்த) ஒளியெறிக்கின்ற அணிகளையணிந்த பெண்ணானவள், உழுநர் ஏர் தூண்ட - உழவர்கள் ஏரில்பூட்டிய மாடுகளைத் தூண்டி நடத்த, கொழுநுதியில் சாய்ந்த குவளை - (அப்போது) கொழுவின் முனையால் கீறப்பட்டுச் சாய்ந்து கீழ்வீழ்ந்த குவளை மலர்களை, மடை மிதிப்ப தேன்பாயும் - நீர்வரும் மடைகளில் அவர்கள் காலால் மிதித்தலினால் அதிலுள்ள தேன்வழிந்து பாய்ந்தோடுகின்ற, மாடு ஒலி நீர் நாடன் - வயற்புறங்களில் நீர் ஓடுகின்ற ஒலிகள் மிக்க நீர்வளப்பம் பொருந்திய நாட்டையுடையவனாகிய, கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு - ஈகையிற் சிறந்த விதர்ப்ப நாட்டு மன்னன் பெற்றெடுத்து வளர்த்த ஒப்பற்ற பூங்கொம்பு போன்றவள் ஆவாள்.

(க - து.) அன்னம் நளனை நோக்கி ‘அரசனே ! நான் கூறிய பெண் விதர்ப்பநாட்டு மன்னன் வீமன் பெற்றெடுத்த கொம்புபோல்பவள் ’ என்றது.

(வி - ரை.) ‘எழு’ எழுதல்: உயர்தல் என்னும் பொருட்டாய் உயர்ந்துள்ள தூணைக் குறித்தது ; ஓங்கல் என்பது, மலையைக் குறித்தல்போல. அடு - அடுதல்: முதனிலைத் தொழிற்பெயர். தன் உயர்ச்சியாலும் வலிமையாலும் தூணை அழித்தது என்பதாகும். ஒத்த என்று பொருள்கூறல், சிறப்பன்று. ஏர் - ஏரிற்பூட்டிய எருதுகள் : ஆகுபெயர். குவளை : ஆகுபெயர். கொடை விதர்ப்பன் -‘வேண்டுவார் வேண்டுவதே ஈயும் பண்பாளன்,’ என, அரசன் கொடைத்திறம் கூறலால், உனக்கும் இம்மங்கையைக் கொடுப்பான் என்னும் தன் உள்ளக் கருத்தை அன்னம் அரசனுக்குக் குறிப்பால் உணர்த்திற்று. பூங்கொம்பு - மலருள்ள கொம்புபோல்வாள். அம்மையின் திருவுருவைக் கூறப்போந்த பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்தள் 1‘குமிழலர்ந்த செந்தாமரைக் கொடி’ என்றதூஉங் காண்க. அதுபோல் ‘ஓர்கொம்’பென்றா ரெனக் கொள்க. (31)

1. திருவிளை, நகரப்: