பக்கம் எண் :

428நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

நளன், காட்டுத்தீயில் கிடந்து வருந்தும் பாம்பைக் காணல்

337. ஆரும் திரியா அரையிருளின் அங்ஙனே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவான்அத் தீக்கானில் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டான் எதிர்.

(இ - ள்.) ஆரும் திரியா அரை இருளின் அங்ஙனே - எத்தகைய அஞ்சாநெஞ்சினரும் துணிந்து செல்லற்கியலா நடு இரவில் (பாழ் மண்டபத்தைவிட்டு) வந்தவாறே, சோர் குழலை நீத்த துயரோடும் - தாழ்ந்த கூந்தலையுடைய தமயந்தியைவிட்டு விட்டுப் பிரிந்துவந்த துன்பத்துடனே, வீரன் திரிவான் - வீரனும் அங்கே சுற்றித்திரிகின்றவனுமாகிய நளமன்னன், அத்தீக் கானில் செந்தீயின் வாய்பட்டு - அக்கொடிய காட்டினிடத்தே செந்நெருப்புத் தழலில் அகப்பட்டுக்கொண்டு, எரிவானை எதிர் கண்டான் - வருந்திக்கொண்டிருக்கின்ற கார்க்கோடகனென்னும் அப்பாம்பை நேரே பார்த்தான்.

(க-து.) பாழ் மண்டபத்தில் தன் மனையாளாகிய தமயந்தியைவிட்டுப் பிரிந்துவந்த நளன், யாரும் செல்ல வொண்ணாத நள்ளிருட் பொழுதில் அக்காட்டில் நெருப்பின் வாய்ப்பட்டு வருந்துகின்ற பாம்பினை நேரே கண்டான் என்பதாம்.

(வி - ரை.) ஆரும் - யாரும். யார் என்பதன் மரூஉ. உம்மை இருளில் திண்மையையும் அஞ்சத் தக்க நிலையையும் தருதலால்,
உயர்வு சிறப்பும்மை. அங்ஙனே - அவ்வாறே என்னும் பொருளில்
வந்தது. சோர்குழல்: வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகத் தமயந்தியைக் குறித்தது. வீரன் - கலங்கா மனநிலை கொண்டவன். எரிதல் - ஈண்டுச்சுடுதல் என்னும் பொருளாய் அதனாலாகிய துன்பத்தைக் குறித்தது. முற்பாட்டில் ‘மொழிவழியே சென்றான்’ என்றதற்கேற்ப, அம்மொழி தோன்றிய இடத்தே பெரும் பாம்பு ஒன்று நெருப்பில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிப்பதை நேரே கண்டானென்பாராய்க் ‘கண்டான் எதிர்’ என்றார். எதிர் - நேர். முன்னே என்னும் பொருளது. காட்டின் மிக்க வெப்பத்துக்கு ‘தீக்கான்’ என்றும், அவ்வெப்பத்தோடு வெப்பமாய்க் கனன்றெறிக்கும் நெருப்பின் மிக்க கொதிப்புக்குச் ‘செந்தீயின் வாய்’ என்றும் தெளிவுற ஆசிரியர் எடுத்து விளக்கியிருக்கும் ஒட்பம் மகிழ்வும் இறும்பூதும் மிக்குள்ளமை யறிந்தின்புறுக. (4)