பக்கம் எண் :

440நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

விரைந்து - உன் உருவத்தை வேறு உருவமாக மாற்றியதாகுமென அறிவாயாக என்று விரைவாகக் கூறினான்.

(க - து.) பாம்பு மன்னன் நளனை நோக்கி, ‘அரசனே! என் பெயர் கார்க்கோடகன் ; நீ இக்காட்டிற்கு வந்ததை யான் அறிந்து கொண்டு, உன் வடிவத்தை வேறாக்கிக்கொண்டு மறைந்து இருக்கவேண்டும் காரணமாகவே உன்னை நான் கடித்து உதவி செய்தேன்’ என்று கூறினான் என்பதாம்.

(வி - ரை.) காய்தல் - வருத்துதல், அல்லது சினத்தல் என்னும் பொருளது. இங்குப் பகைவரைச் சினக்கும் என்று பொருளுரைக்கப்பட்டது. கடம் - மதநீர். ஆண் யானைக்குக் காதுகளிலும், மத்தகத்திலும், ஆணுறுப்பிலுமிருந்து மதநீர் ஒழுகும். அவ்வாறொழுக்கு ஏற்பட்டால் அது மிக்க ஆற்றலுடையதாய் - யாராலும் இடக்க வொண்ணாததாய்த் - தன் கண்முன் காண்பனவற்றை யெல்லாம் அழிக்கும். அது போர்க்களத்தில் மதங்கொண்டால் அதன் ஆற்றல் கூற வேண்டா ; அத்தகைய ஆற்றல் மிக்க கடா யானைகளையுடையா னென்பாராய்க் ‘காயும் கடகளிற்றாய்’ என்றார். காயம் - உடல். வேறு ஆக்கிற்று - வேறாக்கியது. வினைப்பெயர். அரவரசன் தான் நன்றிமறந்தவனல்லன் என்பாராய் ‘வேறாக்கிற் றென்றான் விரைந்து’ என்றார். விரைந்து : இறந்தகால வினையெச்சம். அஃது, என்றான் என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்தது. (13)

கார்க்கோடகன், நளனுக்கு ஆடை கொடுத்தல்

347. கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயும் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினாய் இந்த
அணியாடை கொள்கென்றான் ஆங்கு.

(இ - ள்.) (கார்க்கோடகன் நளனை நோக்கி) கூன் இறால் பாய - வளைவுள்ள இறால் மீன்கள் துள்ளிப் பாய்வதனால், தவளை வாய் குவளை தேன் இறால் பாயும் திரு நாடா - தவளைகளின் வாயிடத்தே குவளை மலர்களிலுள்ள தேனானது (தேனிறாலிலிருந்து ஒழுகுவது போல்) பாய்ந்தோடுகின்ற நீர்வள மிக்க அழகிய நிடத நாட்டு வேந்தே!, கானில் தணியாத வெம் கனலை தாங்கினாய் - காட்டிடத்தே ஆறாத கொடிய தீயை எனக்காகப் பொறுத்துக்