|
விதர்ப்ப நாடு செல்லுதற்கெனக்
குறிப்பினாற் சுட்டுதற்கெனக் கொள்க. ஈது : இது
வென்னும் சுட்டு நீண்டது. கடாம் - மதநீர். வாரணம் -
யானை.
வார்+அ (ண்) ணம் - வாரணம் : நீண்ட மேல்
வாயையுடையது என்னும் காரணப் பெயராய் ஈண்டு
யானையைக் குறித்தது. இதனானே கோழிக்கும்
சங்குக்கும் பெயராயிற்று ஒன்றொழி பொதுச்
சொல்லாக ஈண்டு ஆண் யானைக்கு வந்தது. நேர் விடை
கூறாது தன்மேல் விழுகின்ற மாலை நளன்மேல் தவறி
விழுந்ததெனக் கூறின தன்மை மக்களுக்கொத்த
அறத்தொடு பட்டதாக இல்லாததால் தன்னிலை
திரிந்து மதங்கொண்டலையும் விலங்காகிய ஆண்
யனையை ஒப்பாக வைத்து ‘வாரணந்தான் அன்னன்’
என்று கூறினார். ஓகாரம் வாகுகனை நோக்கி
வினாவலால் வினாப்பொருளில் வந்தது. தான் :
அசைநிலை. காண் : முன்னிலை ஏவல் ஒருமைவினைமுற்று.
(40)
வாகுகன், தமயந்தி இரண்டாஞ் சுயம்வரம்
குறித்துப்
பலவாறாக நினைத்தல்
374. முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண இசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை உலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ இது.
(இ - ள்.) தன் மரபுக்கு ஒவ்வாத
வார்த்தை - தமயந்தியின் குலமுறைக்கு ஏற்காத
(இம்மறு சுயம்வரமென்னும்) சொல், உலகில்
உரைப்பட்டது-உலகில் நிலவிவருவது, முன்னை
வினையான் முடிந்ததோ-இச்சொல் (அக்குலம்)
முன்செய்த தீவினை விளைவினால் ஏற்பட்டதோ,
மொய்குழலாள் என்னை காணத்தான் இசைந்ததோ -
தமயந்தியானவள் என்னைக் காண்பதற்காகவே
உரைத்த மாற்றமோ, இது எவ்வாறோ - இது எந்தவிதமோ
அறிகின்றிலேன் (எனத் தனக்குள் எண்ணி
இரங்கினான் நளன்.)
(க - து.)‘தமயந்தியின்
குலப்பழிப்புக்கு இடனான மறு சுயம்பரம் என்னும்
இச்சொல், முன் செய்த வினையினால் ஏற்பட்டதோ ?
அன்றி என்னைக் காண்பதற்குச் செய்த ஏற்பாடோ ?
யாதென் றறிகிலே னென்று வாகுகன் தன் மனத்துள்
எண்ணினான் என்பதாம்.
(வி - ரை.) முன்னை - முற்காலம்.
வினையால் என்பதில் ஆல் கருவிப்பொருளில் வந்த
மூன்றன் உருபு. மொய் குழலாள் :
|