பக்கம் எண் :

மூலமும் உரையும்477

அழகிய தேர். சுயம்பரத்துக்குச் செல்லவேண்டியதாக இருத்தலான் அதற்கேற்ற தேர் வேண்டும். அதனான், ‘குலத்தேர்’ என்றார். மன் - நிலைபெறுதல் என்பது பொருள். வேந்தர்கள் எல்லாச் செல்வங்களும் தம்பாற் பொருந்த விளங்குதலின் ‘மன்’ எனப்படுவர். மன் ஆகுபெயராய் இங்கே நளனுக்காயிற்று. (42)

வாகுகன், இருதுபன்னனை நோக்கி ‘தேர் கொணர்ந்தேன்
ஏறுக’ எனல்

376. ஒற்றைத் தனியாழித் தேரென்ன ஓடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிழரலும்

தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய்.

(இ - ள்.) பொம் என்று அளி முரலும் - பொம்மென்னும் இசையுடன் வண்டுகள் முழங்குகின்ற, தீம்தேறல் வார்க்கும் தார் சேய் - தித்திப்புள்ள தேனைச் சொரிகின்ற மாலையணிந்த வாகுகனாகிய நளமன்னன், ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவதோர் - ஒப்பற்ற ஓர் உருளையையுடைய சூரியன் தேர் என்னும் படி ஓடுகின்ற சிறந்த மிக்க விரைவு பொருந்திய குதிரைகளைப் பூட்டி, கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன் - வெற்றி மிக்க தேரினைக் கொண்டுவந்திருக்கின்றேன், இதற்கு போந்து ஏறுகு என்று உரைத்தான் - இத்தேரில் வந்து ஏறிக்கொள்க என்று (இருதுபன்னனை நோக்கிக்) கூறினான்.

(க - து.)வாகுகன், இருதுபன்னனை நோக்கி, ‘சூரியன் தேர்போன்று விரைந்து செல்லுகின்றதற்கான நல்ல குதிரைகளைப் பூட்டிக்கொண்டுவந்து தேரை நிறுத்தியுள்ளேன், அதில் வந்து ஏறிக்கொள்க’ என்று கூறினான் என்பதாம்.

(வி - ரை.) ஒற்றை ஆழி - ஓருருளை. சூரியன் ஓருருளை போன்று வட்டமாக இருப்பதால் ஓருருளையுடைய தேரென்றும் அதன் எழுவகை நிறங்களை ஏழு குதிரைகளென்றும் கூறுவது புராணமரபு. அம்முறை பற்றி ஒற்றை ஆழி எனப்பட்டது. அது விரைந்து தடையின்றிச் செல்வதுபோல இத்தேரும் நல்ல இலக்கணம் வாய்ந்த குதிரைகள் பூட்டபற்றுள்ளமையால் ‘ஓடுவதோர்.........தேர்’ என்றான். ஏறுக என்பதிலுள்ள இறுதி அகரம் தொக்கு நின்றது. பொம் என்பது ஒலிக்குறிப்பு