பக்கம் எண் :

478நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

உணர்த்தும் இடைச்சொல். விண்ணென இசைத்தது, துண்ணெனத் துடித்தது என்பனபோற் கொள்க. மேற்பாட்டில், ‘மலர்த்தேன் துளிக்கும் தார் மன்’ என்றும், இப்பாட்டில், ‘தேறல் வாக்கும்தார்ச் சேய்’ என்றும் நளனைக் குறிக்கும் போதெல்லாம் இச்சொல்லாற் குறிப்பதென்னையெனின்? நளன் பிறரெல்லாம் தன்னைச் சார்ந்து வாழுதற்கேற்ற ஈகைப் பண்புடையான் என்பதையும் அஃறிணை உயிர்களிடத்தும் அன்பு பூண்டொழுகும் கடப்பாடுடையான் என்பதையும் குறிப்பால் உணர்த்தற்கெனக்கொள்க. என்னை?

1‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு’

எனத் தேவர்மறை கூறுதலானுமென்க. (43)

வாகுகன் ஓட்டுகின்ற தேர், விரைந்து செல்லும் சிறப்புரைத்தல்

377. முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றான் ஊர்கின்ற தேர்.

(இ - ள்.) சந்தவிரைத் தார் குன்றா மெல் ஓதி தன் செயலை - அழகும் மணமும் பொருந்திய மாலையை மாறாதுகொண்ட மெல்லிய கூந்தலையுடைய தமயந்தி (இரண்டாம் சுயம்வரத்தை) நாடிய செயலைப்பற்றியே, தன் மனத்தே தேர்கின்றான் ஊர்கின்ற தேர் - தன் மனத்திடத்தே யெண்ணியெண்ணி அதைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருக்கின்ற வாகுகனான நளமன்னன் செலுத்திச் செல்கின்ற தேரானது, முந்தை வினை குறுக மூவா மயல்கொண்டான் - பழவினையானது தன்னை நெருங்கிவருதலால் (அதனால் தன் மானமிழக்கவேண்டித் தமயந்திபால்) அளவு கடந்த காம மயக்கத்தைக் கொண்டவனான இருதுபன்னனது, சிந்தையினம் கடுக சென்றது - மனத்தின் விரைவைப் பார்க்கினும் மிக விரைவாகப் போயிற்று.

(க - து.)நளன் ஓட்டிச்செல்கின்ற தேரானது, தான் முன் செய்த தீவினைப்பயனால் மானமிழக்க வேண்டித் தமயந்திபால் விடாத காம மயக்கத்தைக்கொண்ட

1. திருக்குறள் : 72.