1‘குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகு’
என்று உவமை கொடுத்துக் கணிகையாருடன்
கூடி வாழும் கயமைப்பண்பைக் கடிந்து கூறி,
உலகமாந்தர்க்கறிவுரை புகட்டுமாற்றால்
அறியலாம். சந்தம் - அழகு. விரை - மணம். அழகும்
மணமும் பொருந்தியதார் என மாலைக்கு
அடைகொடுத்துரைத் தனரேனும், தமயந்தியின் புற
அழகையும் உள்ளழகாகிய கற்பு அன்பு நாண் ஒப்புரவு
முதலிய உயரிய குணங்களையும் உரைத்தவாறாம். தன்
மனத்தே நளன் தேர்கின்ற செயலாவது, ‘கற்புடையாள்
கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றன்றேயெனப்
போற்றுவரன்றோ ? கற்புடைப்பெண்டிர் பிற ஆடவர்
நெஞ்சிற் புகாரன்றோ ? அப் பெண்டிரும் பிறரைக்
கனவினும் கருதாரன்றோ ? மீண்டுஞ் சுயம்வரமா ?
திருமணமா?’ எனப் பலவாறாகச் சிந்தித்த நிலை.
ஊர்தல் - செலுத்தல். பிறவினைப் பொருளில் வந்தது.
(44)
இருதுபன்னனுடைய மேலாடை விழ, அதை
எடுக்குமுன்
தேர் பத்துக்காதம் செல்லல்
378. மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதின்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.
(இ - ள்.) தோலாமை மேல்
கொண்டான் ஏறிவர - வெற்றி மிக்கவனான
இருதுபன்னன் ஏறிவருவதற்கு, வெம்மை கலிச்சூதின் -
கொடுமை பொருந்திய கலியின் வஞ்சமுள்ள
சூதாட்டத்தின்மீது, மால்கொண்டான்
கோல்கொண்ட மா - மயக்கங் கொண்டவாகுகனாகிய
நளமண்ணன் முட்கோல் கொண்டு முடுக்கி ஓட்டிய
குதிரைகள், மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் -
(இருதுபன்னன்) தன் மேலாடை கீழே விழுந்துவிட்டது
அதனை எடுவென்று வாகுகனை நோக்கிக் கூறினான்,
அவ்வளவில் - அது சொல்லி முடிப்பதற்குள், நால்
ஆறுகாதம் நடந்தது - பத்துக்காத தூரம் பறந்து
சென்றன (என்றான்).
1. சிலப், 5:200 - 3.
|