பக்கம் எண் :

மூலமும் உரையும்489

வியப்பும் மகிழ்வும் தருவதாகும். வரி - புள்ளிகள். பொறிவண்டு - அழகுள்ள வண்டுகள் என்பதைக் குறித்தார். வண்டுகள் கள்ளுண்டு உறங்குமென்பதனை,

1‘வேலை மடற்றாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு’

என்பது இளங்கோவடிகளாரின் இயற்கை மொழி.

பின்னையும் என்பதிலுள்ள உம்மை இறந்தது தழுவிய எச்சப் பொருளன்றி இழிவு சிறப்புமாம் ; என்னை ? முன்பே தேன் உண்டது போதாவென்று மேலும் விரும்புதல் ஒவ்வாதென்பதைக் குறிக்க வந்ததாகலான். கமலம், நெய்தல் என்பன அவ்வற்றின் மலருக்காதலால் ஆகுபெயர். எய்துதல் - எய்தல் எனக்குறைத்தல் விகாரம் பெற்றது. என், என்னவென்னும் வினாவினைக் குறிப்பு. இதனால் இருதுபன்னனை வந்த காரணம் என்ன வென்று வீமன்கேட்டான் என்க. (51)

இருதுபன்னன் மறுமொழி கூறல்

385. இன்றுன்னைக் காண்பதோர் ஆதரவால் யான்இங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மேல் உள்ளந் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.

(இ - ள்.) ஒளிஆர் வேல் கண்ணாள்மேல் உள்ளம் துரப்ப - ஒளிபொருந்திய வேல்போன்ற கண்களையுடைய தமயந்தியிடத்துத் தன் உள்ளம் சென்றமையால், தெளியாது முன்போந்த சேய்-முன் ஆராய்ச்சியின்றி வந்தவனான இருதுபன்ன வேந்தன், மன்றல் மலர் தாராய் இன்று உன்னை காண்பது ஓர் ஆதரவால்-மணங்கமழும் மலர்மாலையணிந்த அரசனே ! இன்றைக்கு உன்னைக் காணவேண்டுமென்னும் ஓர் ஆசை மிகுதியினால், யான் இங்ஙன் வந்து அடைந்தேன் என்றான் - நான் இங்கே வந்து சேர்ந்தேன் என்று கூறினான்.

(க - து.)முன்பின் ஆராயாது வந்த இருதுபன்னன், ‘மலர்மாலையணிந்த வேந்தனே ! நான் இன்று உன்னைப் பார்ப்பதற்கே வந்து சேர்ந்தேன். வேறு யாதுமில்லையென்று சொன்னான்’ என்பதாம்.

1. சிலப்; 6 : இறுதி வெண்பா.