பக்கம் எண் :

490நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

(வி - ரை.) ஆதரவு-பேரன்பு. இஃது இப்பொருள் தருதலை ‘ஆதரவுபட்டதே இன்பம்’ என்னும் ஒளவையார் திருமொழி யானும் அறிக. இங்ஙன் - இங்ஙனம் என்பதன் கடைக்குறை. இவ்விடம் என்னும் பொருளது. மன்றல்-மணம். ஒளியார்வேல் - ஒளிமிக்க வேல்போன்ற : உவமத்தொகை. தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நிகழவிருக்கின்றது என்று கேட்டவுடனே தமயந்தியிடத்தே காதல் கைம்மிக உடனே குண்டினபுரத்துக்குப் புறப்பட்டு வந்தானாகலின், முன்பின் அதுபற்றிச் சிறிதும் எண்ணி ஆராயாது ‘என்மேல்’ எறிகின்ற மாலை எழில் நளன்றன், முன்னே விழுந்தது’ என்று கூறிப் பெருங்காதல் உந்தநின்று வந்த இருதுபன்னனை ‘தெளியாது முன்போந்த சேய்’ என்ற சொற்களாற் குறித்தார். சேய் - இளைஞன் என்னும் பொருளது. இளங்கோலத் திறைவனாகிய முருகவேளை 1‘எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்’ என்று ஆசிரியர் நக்கீரனாரும், 2‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்று ஆசிரியர் தொல்காப்பியனாரும் அருளுமாற்றால் தெளியப்பெறும். சேய் - செந்நிறமுடையான் என்றலுமாம். இளம் பருவத்தினர் எதையும் எண்ணாது ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப நடப்பர்
ஆகலின் அவ்விளைஞர் பெயர் குறிக்கும் சொல்லான ‘சேய்’ என்றும், தெளியாமல் செய்கின்ற செயலைக் காட்ட ‘தெளியாது முன்போந்த’ என்னும் அடையும் புணர்த்துக் கூறினார். துரப்ப என்பது காரியப்பொருட்டாக வந்த இறந்தகாலங் காட்டிய செயவெனெச்சம். 3‘ஊழ்வினை
கடைஇ உள்ளம் துரப்ப’ என்றார் பிறரும். (52)

வாகுகன், குதிரைகளை அவிழ்த்துக் கட்டிவிட்டுச்
சமைக்க ஒருப்படல்

386. ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவைஆற்றிக்
கோதில் அடிசில் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயில் கார்நீலம் கண்விழிக்கும் நாடன்
மடைவாயில் புக்கான் மதித்து.

(இ - ள்.) மேதி கடைவாயில் கார்நீலம் கண்விழிக்கும் நாடன் - எருமைகளின் கடைவாயிடத்தே (மேய்ந்து குதட்டுகின்றபோது) கருங்குவளை அரும்பானது பூவாக மலருகின்ற நிடதநாட்டு வேந்தனான நளன், ஆதிநெடும் தேர் பரிவிட்டு அவை

1. திருமுருகு : 61. 2. தொல். அகத்திணை : 5.
3. சிலப், 10 : 4.