|
(இ - ள்.) பொன்தேர் வரபாகன்
புக்கமனை - அழகுமிக்க தேரோட்டுந் தொழிலிற்
சிறந்த வாகுகனான நளமன்னன் புகுந்த மடைப்பள்ளி
வீடானது, ஆதிமறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த
- பழமையான வேதநூல் முதலிய அற நூல்கள் யாவற்றையும்
கற்றுத் தெளிந்த, நீதிநெறி ஆளர்
நெஞ்சம்போல்-உயர்ந்த வழியில் நடக்கின்ற
பெரியோர் மனம் (நல்ல அமைதியான பண்புகளில்
நிரம்பியிருப்பது) போல, யாதும் நிரப்பாமல்
எல்லாம் நிரம்பிற்று - (நெருப்பு நீர் விறகு முதலிய
சமைத்தற்கு வேண்டும் பொருள்களில் எதுவும் பிறர்
கொண்டுவந்து நிறைக்காமலே சோறு கறிகள்) யாவும்
வந்து நிரம்பின.
(க - து.)வாகுகன் புகுந்த
மடைப்பள்ளி இடமானது, நீதிவழியில் நடக்கின்ற
பெரியோர் மனம்போன்று நெருப்பு நீர் முதலிய
எந்தப் பொருள்களும் இல்லாமலே சோறு கறிகள்
யாவும் நிரம்பியிருந்தன என்பதாம்.
(வி - ரை.) ஆதி - பழமை. 1‘ஆதியும்
அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி’ எனத்
திருவாசகத்தும், 2‘ஆதி பகவன் முதற்றே உலகு’ எனத்
திருக்குறளினும், ‘ஆதித் தனிக்கோலம் ஆனான்’
என இந்நூலகத்தும் ஆதி என்ற சொல் பழமை என்னும்
பொருளில் வழக்குற்று வருதலையறிக.
மறைபொருள்களையுடையது மறையெனப்பட்டது.
மறைபொருளாவது காண்டற்கரிய - எளிதில்
ஆய்ந்துணர்தற்கரிய பொருள் என்னும் பொருளது.
காண்டற்கரிய பொருள்களாவன மக்கட்கு வேண்டிய
அன்பு அருள் கொடை வாய்மை முதலியவான
அரும்பொருள்கள். இவ்வரும்பொருள்களை யெல்லாம்
நன்கு ஆய்ந்துணர்ந்த பெரியார் நெஞ்சம் 3‘அறனறிந்தேம்
; ஆன்ற பொருள் அறிந்தேம் ; இன்பின்
திறனறிந்தேம் ; வீடுதெளிந்தேம்’ என்று இன்புற்று
இருக்கும் மன அமைதித் தன்மையே நிறைவு. இந்நிறைவு
பெற்றார்க்கு உலக நிலையாமை உணர்வும்,
அதுகாரணமாக யான்
எனது என்னும் செருக்கும் நீங்கி உண்மை உணர்வே
மேலோங்கி
நிற்க, அதனால் மனக்குறைவின்றி இடுக்கண் வரினும்
அதற்கு ஏங்காது அதற்கும் மகிழ்கொண்டு
வாழ்வாராதலின், அம்மன நிறைவை நளமன்னன்
சென்றுமடைப்பள்ளியில் சோறும் கறியும் நிறையத்
தன் விஞ்சையால் அமைத்த சிறப்புமுறைக்கு
உவமையாக்கி’நெறியாளர் நெஞ்சம் போல்’ என்று
கூறினார். சமைத்தற்கு வேண்டும் பொருள்களான,
விறகு, நீர், நெருப்பு இன்றியே தான் பெற்ற
வரத்தின் உதவியால் எளிதில் இவ்வுணவுப்
பொருள்கள்
1. திருவாசகம் : திருவெம்பாவை : 1. 2.
திருக்குறள் : 1.
3. திருவள்ளுவ மாலை : 5.
|