பக்கம் எண் :

மூலமும் உரையும்493

நிரம்ப மடைப்பள்ளிக்கட் பெருக்கினான். ஆதலால் அச்சிறப்புத் தோன்ற, ‘யாதும் நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே’ என்றார். பொன்தேர் - பொன்னான் இயன்ற தேரென்னலுமாம். வரம்+பாகன் - வரப்பாகன் = வரம்பெற்ற மடைத்தொழில்லாளன்; மேன்மை பொருந்திய தேரோட்டுவோன் என்றலுமாம். உணவு முதலியவற்றை அறுசுவையும் பொருந்தப்பாகம் செய்வோன், ‘பாகன்’ எனப் பெற்றான். சுயம்வரம் நிகழ்வதற்குமுன் தமயந்திபால் தேவர்கள் வேண்டுகோட் கிணங்கித் தூதுபோய் வந்த நன்றிக்குக் கைம்மாறாக ஒவ்வொருவரும் நீர் முதலியன இன்றிச் சமைக்கின்ற வித்தை வரும்படி வரம் ஈந்தாராகலின் அதை உட்கொண்டு, ‘வரப்பாகன்’ என்றார். (56)

தமயந்தி, தன் தோழியிடம் கூறல்

388. இடைச்சுரத்தில் தன்னை இடையிருளில் நீத்த
கொடைத்தொழிலன் என்றயிர்த்த கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற எல்லாம் தெரிந்துணர்ந்து வாவென்றான்
நைகின்ற நெஞ்சாள் நியந்து.

(இ - ள்.) நைகின்ற நெஞ்சாள் - தன் கணவன் பிரிவினால் வருந்துகின்ற மனத்தையுடையவளாகிய தமயந்தியானவள், நயந்து - விரும்பி, இடைசுரத்தில் இடைஇருளில் தன்னை நீத்த - நடுக்காட்டில் அரைநடு இரவில் தன்னைத் தனியே விட்டுப்பிரிந்த, கொடை தொழிலான் என்று அயிர்த்த கோமான் - ஈகையானாகிய நளமன்னனென்று தன்னால் ஐயங்கொள்ளப்பட்ட (வாகுகனென்னும்) தலைவனுடைய, மடைத் தொழில்கள் செய்கின்றது எல்லாம் தெரிந்து உணர்ந்துவா என்றாள் - சமையல் முறைகளையெல்லாம் கண்டு அறிந்துஉணர்ந்து வருவாயாக என்று தன் தோழியொருத்திக்குச் சொல்லி அனுப்பினாள்.

(க - து.) தமயந்தியானவள், தன்கணவரோ என்று ஐயங்கொண்ட வாகுகனிடம், தோழி ஒருத்தியை அழைத்து அவன் மடைத்தொழில்கள் செய்பவையெல்லாம் கண்டறிந்துணர்ந்து வருகவென்று கூறியனுப்பினாள் என்பதாம்.

(வி - ரை.) இடைச்சுரம், இடையிருள் என்பன. சொல்நிலை மாறிய இலக்கணப் போலி. இவை காட்டின் கொடுமையையும் பிரிதற்கியலாத காலத்தையும் உணர்த்தின. கொடைத் தொழி