|
(வி - ரை.) கோதை - மாலை.
அரசர்கட்கு வேல்தாங்குதல் மரபாகலான் இவன்
அரசகுமரன் ஆதலால் அவ்வடை கொடுத்துக்
கூறப்பட்டது. தமயந்தி தன் மக்கள் இருவரையும் தன்
கணவனென்று ஐயப்படுகின்ற வாகுகன்பால் அனுப்பி
விளையாடவிட்டு, மேல் அங்கு நிகழ்வதை அறிந்து
வருகவென்று தோழியொருத்தியை அனுப்பினாளெனக்
கொள்க. ஆதி அரசன் - முன்புள்ள மன்னன்.
வளையாடுதல் - வளையல்கள் அசைந்துகொண்டு
செல்லுதல். அன்றிச் சங்க இரேகையுள்ள
கையென்றலுமாம். 1‘விளையாடும் வண்கைப்
பொலன்சங் கொடும்
பொங்க’ என்றார் குமரகுருபர அடிகளாரும். போத :
புகுத என்பதன் மரூஉ மொழி. (56)
வாகுகன், மக்களைத் தழுவிக்கொண்டு
அவர்களை வினவல்
390. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்கள் என்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.
(இ - ள்.) வன்ம களியானை மன் -
பகைமைத் தன்மை கொண்ட மதயானையையுடைய வாகுகனான
நளமன்னன், மக்களை முன்காணா - தன் புதல்வர்களைத்
தன் எதிரே கண்டு, மனம் நடுங்கா வெய்து உயிரா -
(வருத்தங்கொண்டு) மனம் பதைத்துப் பெரு
மூச்சுவிட்டு, புக்கு எடுத்து வீரபுயத்து அணையர் -
(விரைந்து அவர்பாற்) சென்று அவர்களைத்
தூக்கியெடுத்து வீரமிக்க தன் தோள்களில்
அணைத்துக்கொண்டு, மக்காள் - குழந்தைகளே ! நீர்
என் மக்கள் போல்கின்றீர் - நீவிர் இருவரும்
என் புதல்வர்களைப் போலவே இருக்கின்றீர், யார்
மக்கள் என்று உரைத்தான்-(நீவிர்) யார் பெற்ற
மக்கள் என்று கேட்டான்.
(க - து.) வாகுகன், மக்களைக்
கண்டவுடன் மனம் நடுங்கிப் பெருமூச்சுவிட்டு
விரைந்தோடித் தூக்கியெடுத்து, ‘நீர் இருவரும் என்
மக்களைப்போலவே இருக்கின்றீர் ; நீர் யார்
பெற்ற புதல்வர்கள் ?’ என்று கேட்டான் என்பதாம்.
(வி - ரை.) நடுங்கா உயிரா அணையா
என்பன செய்யா என்னும் வாய்ப்பட்டு
வினையெச்சம். நளன் தன் மக்களைக்
1. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் -
84.
|