பக்கம் எண் :

மூலமும் உரையும்499

வாகுகன், குழந்தைகளைப் பார்த்து வினாவுதல்

393. உங்கள் அரசொருவன் ஆளநீர் ஓடிப்போந்
திங்கண் உறைதல் இழுக்கன்றோ - செங்கை
வளவரசே என்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து.

(இ - ள்.) மாதவத்தால் பெற்ற - (வாகுகனாகிய நளன் தான்) பெரிய தவத்தால் பெற்றெடுத்த, இளஅரசை நோக்கி - (தன் மகனாகிய இந்திரசேனனென்னும்) இளவரசனைப் பார்த்து, செங்கை வள அரசே - சிவந்த கைவளமுடைய இளவேந்தே!, உங்கள் அரசு ஒருவன் ஆள - உங்களது உரிமையாகிய அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்டு வேறொருவன் ஆண்டுகொண்டிருக்க, நீர் ஓடிப்போந்து - நீங்கள் (அவனுக்கு அஞ்சி) ஓடிவந்து, இங்கண் உறைதல் இழுக்கு அன்றோ என்று எடுத்து உரைத்தான் - (உன் தாய் பிறந்த இடமாகிய) இந்த நகரில் வாழ்ந்திருத்தல் மானக் குறைவன்றோ என்று விளக்கமாகக் கூறினான்.

(க - து.) வாகுகனான நளன், தன் புதல்வனாகிய இளவரசனை நோக்கி, ‘வேந்தே ! உங்கள் அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்டு வேறொரு மன்னன் தனக்குரிமையாக ஆள, நீங்கள் அவனுக்கு அஞ்சி வந்து இங்கே வாழ்தல் மானக்கேடல்லவா?’ என்று கேட்டான் என்பதாம்.

(வி - ரை.) உங்கள் அரசு: ஆறாம் வேற்றுமைத்தொகை. ஒருவன் - வேறு ஒருவன்; சிறிதும் உங்களுக்கு உரிமையில்லாதவன் என்று கூறியபடி. ஓடிப்போதல் - ஓடிவருதல். இங்கண் - இவ்விடம். ஈண்டுக் குண்டினபுரம். இழுக்கு - இழிவு. அன்றோ என்பதில் ஓகாரம் வினாப்பொருள். செம்கை - சிவந்த கை. வளம் - கொடை, அல்லது செல்வமென்றலுமாம். மாதவம் - பெரிய தவம். பெரியதவமாவது செயற்கரிய செய்து மகனைப் பெறவேண்டி முயன்ற கடமை.

1‘மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்என்னுஞ் சொல்’

என்னும் வள்ளுவர் மறைமொழிக் கருத்தும் அரும்பெறற் புதல்வரைப் பெறுதற்குப் பெருந்தவஞ் செய்யவேண்டுமென்பதைச் சுட்டுகின்றது காண்க. எடுத்தல் - பெருங்குரலெடுத்துப் பேசுதல். எடுத்தல், இப்பொருள் தருதலை,

1. திருக்குறள் : 70.