1‘ நின்றீமின் மன்னீர் நெருநல்
திறைகொணர்ந்து
முன்தந்த மன்னர் முடிதாக்க - இன்றும்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ’
என வருவது கண்டு இன்புறுக. (62)
வாகுகன் மறுமொழி கூறல்
396. மன்னர் பெருமை மடையர் அறிவரோ
உன்னை அறியா துரைசெய்த - என்னை
முனிந்தருளல் என்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.
(இ - ள்.) (இளவரசனை வாகுகன்
நோக்கி) மன்னர் பெருமை மடையர் அறிவரோ -
அரசர்களுடைய அருமை பெருமைகளை அடுமடையர்
அறிவார்களோ ?, உன்னை அறியாது உரைசெய்த என்னை -
உன் பெருமையறியாமல் பேசிய என்னை, முனிந்து அருளல்
என்று - சினந்துகொள்ள வேண்டாவென்று கூறி, கனிந்து
உருகி கண் நீர்வார முடிசாய்த்து நின்றான் - மனம்
தளர்ந்து கரையக் கண்களிலிருந்து நீர்
(தாரைதாரையாகப்) பெருக்கெடுத்தோடத் தலைவணங்கி
நின்றான்.
(க - து.) ‘ஐயனே! மன்னர்களின்
உயர்வை மடையர்கள் அறிவார்களோ? உன் அருமை
பெருமை உணராது சொன்னதற்கு என்மீது சினந்துகொள்ள
வேண்டா’ என்று கூறி, நளன் மனங்கரைந்து கண்ணீர்
ஒழுக நின்றான் என்பதாம்.
(வி - ரை.) மன்னர், மடையர் என்பன
அவ்வவர்களின் தன்மைகளை விளக்கிநின்றன.
மடையர் என்பது சமையல் செய்வோர் என்னும்
பொருளோடமையாது, மடையர் - அறிவற்றவர் என
இருபொருள் நயந்தோன்றி நிற்றலை அறிக. மடையர் :
மடம் என்னும் பண்புப் பெயரடியாகப் பிறந்த
குறிப்பு வினைப்பெயர். அறிவரோ என்பதில்,
ஓகாரம் அறியாரென்ற மறுதலைப் பொருளைத் தருதலால்
எதிர்மறை. முனிந்தருளல் - முனியாதே என்னும்
எதிர்மறைப் பொருளில் வந்த முன்னிலை ஏவல்
வியங்கோள், அல்விகுதி பெற்றுவந்தது. அல்
1. முத்தொள்ளாயிரம் : 67.
|