|
வீமன், வாகுகன் பேச்சால் நளனே
எனத்தெளிதல்
401. செவ்வாய் மொழிக்கும் செயலுக்கும் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினான் நோக்கித் தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து.
(இ - ள்.) (வீமன் வாகுகன்
தன்மையைக் கண்டு) கொண்ட உரு - இவன் கொண்டுள்ள
உருவமானது, செவ்வாய் மொழிக்கும் செயலுக்கும்
சிந்தைக்கும் ஒவ்வாது என்னா - இவனுடைய செம்மையான
சொற்களுக்கும் செய்கின்ற தொழிற்
சிறப்புக்கும் எண்ணத்துக்கும் பொருந்தாததாக
இருக்கின்றதென்று, எவ்வாயும் நோக்கினான் -
எல்லாத்தன்மைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்தான்,
நோக்கி நுணங்கியது ஓர் வாக்கினான் தன்னை
மதித்து தெளிந்தான் - ஆராய்ந்து நுட்பமான சிறந்த
சொல்லாளனாகிய வாகுகனை (நளனேயாவான் என) எண்ணி
உறுதிகொண்டான்.
(க - து.) வீமமன்னன் வாகுகன்
சொற்களும் செயலும் எண்ணங்களும் உருவத்துக்கு ஒத்த
தன்மையில் இல்லாது மேம்பாடாக இருந்ததனால்,
இவன் நளனேயாகுமென்று எண்ணி முடிபு செய்தான்
என்பதாம்.
(வி - ரை.) செம்மை+வாய் -
செவ்வாயென விகாரப்பட்டுப் புணர்ந்தது,
பண்புப்பெயராகலான். செம்மை ஈண்டு நிறத்தைக்
குறிக்காது நேர்மை, சிறப்பு என்னும் குணப்பண்பு
குறித்து நின்றது. ஒருவர் நன்னிலையையும் தீய
நிலையையும் அவர்தம் வாய்மொழி கொண்டே
அறியப்பெறும். என்னை?
1‘நிலத்திற் பிறந்தமை
கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்’
2‘ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே
தீய
வழுக்கியும் வாயாற் சொலல்’
எனப் பொய்யில்புலவர்
பொருளுரைக்கண் கூறுதல் கொண்டு, வாய்மொழியே
ஒருவன் தன்மையை அளக்குங்கோல் எனக்கொள்க.
இங்கே வாகுகன் என்பான் வாய்ச்சொற்கள்,
செயல்கள், எண்ணங்கள் யாவும் உயர்ந்த பண்பு
வாய்ந்தனவாக இருக்கின்றன. ஆனால் உருவோ அதற்கு
முரண்பாடுடையதாக இருக்கின்றது. உருவைக்கொண்டு
மதித்தல் கூடாதெனக் கருதினா
1, 2 திருக்குறள் : 959, 139.
|