|
கின்பமும் பல்க இருக்குமாதலால்,
அச்சிறப்புத் தோன்றவே ‘பூவிந்தை’ என்றார்.
விந்தை - வியப்பு. பல்வகை நிறமும் குணமும் மணமும்
பெற்ற தன்மை. வாழ்தல் - நிலைத்திருத்தல்.
பொழில் - சோலை. ஒரு - ஒப்பற்ற, ஒன்று என்னும்
எண்ணுப் பொருளினும் வந்தது. (84)
நளன், புட்கரனுக்குத் தூதனுப்பி
அவனை அழைத்துவரக் கூறுதல்
418. மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணையம் உளதென்று - கொற்றவனைக்
கொண்டணைவீர் என்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்தெரியல் தேர்வேந்தன் தான்.
(இ - ள்) தண்தெரியல்
தேர்வேந்தன் - குளிர்ச்சி பொருந்திய மலர்
மாலையணிந்த தேரினையுடைய நளமன்னன்,
கொற்றவனுக்கு என் வரவு சொல்லி -
வெற்றிவேந்தனான புட்கரனுக்கு என்வருகையை அறிவித்து,
மறு சூதுக்கு உற்ற பணையம் உளது என்று - என்னிடத்தில்
இரண்டாம் சூதுக்குப் பந்தயப்பொருள்
இருக்கின்றதென்று கூறி, அவனைகொண்டு அணைவீர்
என்று குல தூதரைவிடுத்தான் - அவனை அழைத்துக்கொண்டு
வருவீர்களாகவென்று கூறிச் சிறந்த தூதர்களை
அனுப்பினான்.
(க - து.) நளன் தூதர்களை அழைத்து, ‘தூதர்களே!
நீவிர் புட்கர மன்னனிடம் போய் என் வருகையைக்
கூறி என்பால் மறு சூதாடுதற்குரிய பந்தயப்பொருள்
இருக்கின்றதென்று அறிவித்து அவனை அழைத்துகாண்டு
வாருங்கள்’ என்று சொல்லித் தூதர்களை
அனுப்பினான் என்பதாம்.
(வி - ரை.) மற்று - அசைநிலை. அவனுக்கு
: பண்டறி சுட்டு உருபேற்றது. பணையம் -
பந்தயப்பொருள். உளது - உள்ளது. கொற்றவன் -
வெற்றியுடையவன். ஈண்டு அரசனைக் குறித்தது.
குலத்தூதர் - தூதுபோதற்கேற்ற தகுதி வாய்ந்தவர்.
தூது செல்வார்க்குத் தகுதியாவது, அன்பு,
நற்குடிப்பிறப்பு, அரசர்க்கு மனங்கொள்ளும்படி
சொல்லும் சொல்வாய்ப்பு முதலியனவாகும். இதனைத்
திருவள்ளுவரும் அமைச்சரின் சிறப்புக்கு
எடுத்துக்காட்டாக ‘சொலல் வல்லன் சோர்விலன்’
என்று கூறியதோடமையாது தூதனுக்கும்,
|